|
||||||||
இரண்டாம் திருமுறை-118 |
||||||||
2.118.திருத்திலதைப்பதி
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர்.
தேவியார் - பொற்கொடியம்மை.
2747 பொடிகள்பூசிப் பலதொண்டர்
கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த
நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும்
விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்
மணங்கமழும் மதிமுத்தமே.
2.118. 1
வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும்.
2748 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு
சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர
நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனலரிசில்
சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ்
சோலைம் மதிமுத்தமே.
2.118. 2
தௌந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரையிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதிமுத்தம், நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து. அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும்.
2749 அடலுளேறுய்த் துகந்தான்
அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்ச அமுதாக
வுண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி
சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன்
பிலிற்றும் மதிமுத்தமே.
2.118. 3
திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்குவதும், மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும், அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும்.
2750 கங்கைதிங்கள் வன்னிதுன்
எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில்
வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில்
சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
தழகார் மதிமுத்தமே.
2.118. 4
கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி, எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும்.
2751 புரவியேழும் மணிபூண்
டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு
செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு
வேங்கைசுர புன்னைகள்
மரவமவ்வல் மலருந்
திலதைம் மதிமுத்தமே.
2.118. 5
ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு, முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித்தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும்.
2752 விண்ணர்வேதம் விரித்தோத
வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்
செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு
சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேண
நின்றம் மதிமுத்தமே.
2.118. 6
விண்ணுலகிலுள்ளவரும், வேதங்களை அருளியவரும், ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும், தம்மை எண்ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள் செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், தௌந்த நிலாவொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும்.
2753 ஆறுசூடி யடையார்புரஞ்
செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் முருவர்க்
கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்
சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில்
சூழ்ந்தம் மதிமுத்தமே.
2.118. 7
கங்கையைத் தலையில் சூடியவர். திரிபுரப் பகைவருடைய கோட்டைகளை அழித்தவர். மாதொரு கூறர். அவ்விறைவர்க் குரிய இடம், தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும், அழகியதும், நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும்.
2754 கடுத்துவந்த கனன்மேனி
யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள்
அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை
புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந்
திலதைம் மதிமுத்தமே.
2.118. 8
சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பா வழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும்.
2755 படங்கொணாகத் தணையானும்
பைந்தா மரையின்மிசை
இடங்கொணால்வே தனுமேத்த
நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர்
பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு
செய்யும் மதிமுத்தமே.
2.118. 9
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும்.
2756 புத்தர்தேரர் பொறியில்
சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி
லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்
றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு
செய்யும் மதிமுத்தமே.
2.118. 10
புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமையில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்.
2757 மந்தமாரும் பொழில்
சூழ்திலதைம் மதிமுத்தமேற்
கந்தமாருங் கடற்காழி
யுள்ளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர
நின்றேத்த வல்லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி
சேர்வது திண்ணமே.
2.118. 11
தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப்பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி.
திருச்சிற்றம்பலம்
2.118.திருத்திலதைப்பதி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|