|
||||||||
இரண்டாம் திருமுறை-120 |
||||||||
2.120.திருமூக்கீச்சரம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
2769 சாந்தம்வெண்ணீறெனப்பூசி
வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை
யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந்
நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்றதோர் மெய்ம்மையே.
2.120. 1
சந்தனம்போலத் திருநீற்றை உடல் முழுதும் பூசி, கங்கையைச் சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான், காந்தள் போன்ற கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற்குரிய காரணத்தை ஆராய்ந்தறிந்தவர்கள் யார்? கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும்.
2770 வெண்டலையோர் கலனாப்
பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த்
துமையாளொடுங் கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின்
வேனில் வேள்வெந்தெழக்
கண்டவர் மூக்கீச்சரத்தெம்
அடிகள் செய்கன்மமே.
2.120. 2
வெண்தலையை உண்கலனாகக் கையில் ஏந்திப் பலிதேர்தல், விரிந்தசடையில் கங்கையைத் தாங்குதல், உமையம்மையோடு கூடியிருத்தல், பகைவர்தம் முப்புரங்களை எய்து அழித்தல், மன்மதனை நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும் எம் அடிகள் செய்த செயல்களாகும்.
2771 மருவலார்தம் மதிலெய்த
துவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட்டி
யதும்உல குண்டதால்
செருவிலாரும் புலிசெங்
கயலானை யினான்செய்த
பொருவின் மூக்கீச்சரத்தெம்
அடிகள் செயும்பூசலே.
2.120. 3
போர்க்கருவியாகிய வில், புலி, கயல் ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுக்குரியவனாய் விளங்கிய கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஒப்பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம் அடிகள் செய்த போர்களில் மும்மதில்களை எய்தது, மால்மகனாகிய காமனை எரித்தது ஆகிய உலகறிந்தனவாம்.
2772 அன்னமன்னந் நடைச்சாய
லாளோ டழகெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை
யாள்மேவிய காரணம்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும்
ஓங்கு செங்கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோர்மாயமே.
2.120. 4
தென்நாட்டின் உறையூர் வஞ்சி ஆகிய சோழ, சேர மண்டலங்களுக்கும் உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும் அடிகள், அன்னம் போன்ற நடையினை உடைய உமையம்மையாரோடு அழகுற விளங்கி, மின்னல் போன்ற சடையில் கங்கையைக் கொண்டுள்ள காரணம் யாதோ?
2773 விடமுனாரவ் வழல்வாய
தோர் பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர்
பேயொடு நள்ளிருள்
வடமன்நீடு புகழ்ப்பூழி
யன்றென்ன வன்கோழிமன்
அடன்மன்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோரச்சமே.
2.120. 5
வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டியனாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன் கட்டிய மூக்கீச்சரத்துறையும் அடிகள் அச்சம் தரும் முறையில், அழல் போன்ற வாயில் நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டியவர். நள்ளிருளில் பேயோடு, ஆரழலில் நடனம் ஆடுபவர்.
2774 வெந்தநீறு மெய்யிற்
பூசுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வதும்
இங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன்
செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோரேதமே.
2.120. 6
அகத்துறைப்பாடல்: பகைவரின் மானத்தை அழிக்கும் பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடையவனுமான கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த ஏதமான செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத்திருமேனியராய், அடல் வல்லவராய், மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை மாயமான முறையில் கவர்ந்து சென்ற தாகும்.
2775 அரையிலாருங் கலையில்ல
வனாணொடு பெண்ணுமாய்
உரையிலரவ் வழலாடு
வரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதின்மூன்
றுடன்வெவ்வழ லாக்கினான்
அரையன்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோரச்சமே.
2.120. 7
இடையில் பொருந்தும் உடை இல்லாதவன். ஆணும், பெண்ணுமாய் விளங்குபவன். அழலில் நின்று ஆடுபவன். ஒன்றாயின்றிப் பலபலவேடம் கொள்பவன். பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து அழித்தவன். கோச்செங்கணான் கட்டிய மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும் அப்பெருமான், செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும்.
2776 ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற்
றதுங்கூற்றை யுதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வல
னேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன்
னுரத்தை நெரித்தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள்
செய்யாநின்ற மொய்ம்பதே.
2.120. 8
மூக்கீச்சரத்து அடிகள் செய்த வலிய செயல்கள் ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது, கூரிய முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பிடித்துள்ளது. ஆரவாரிக்கும் வாயினனும் வலியமூர்க்கனும், அரக்கனும் ஆகிய இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும்.
2777 நீருளாரும் மலர்மேல்
உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட
மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்ன
வன்செம்பி யன்வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோர்செம்மையே.
2.120. 9
சிறப்புமிக்க தென்னவன், செம்பியன், வில்லவன் ஆகிய மூவேந்தரும் வந்து வழிபடும் மூக்கீச்சரத்தில், உறையும் பெருமான் நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும், நெடியமாலும் புகழிற் பொருந்திய திருவடிகளைத் தேட முற்பட்டபோது தீத்திரளாய் நின்றவன்.
2778 வெண்புலான்மார் பிடுதுகிலினர்
வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார்
மொழி யூனமதாக்கினான்
ஒண்புலால்வேன் மிகவல்லவ
னோங்கெழிற் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்றதோர் பச்சையே.
2.120. 10
வெண்மையான புலால் நாற்றம் வீசும் ஆடையை மார்பிற் கொண்டவரும், வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய புத்தர்களும் சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய தாக்கினான். புலால் மணக்கும் வேல் வென்றி உடையவன். சோழமன்னன் எடுப்பித்த மூக்கீச்சரத்து அப் பெருமான் செய்யும் புதுமையான செயல் இதுவாகும்.
2779 மல்லையார்மும் முடிமன்னர்
மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி
சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழி
யுள்ஞான சம்பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல
காளவும் வல்லரே.
2.120. 11
மற்போரில் வல்லவராய முடிமன்னர் மூவரானும் தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள் மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச் செந்தமிழைச் சொல்லவல்லவர் வானுலகையும் ஆளவல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.120.திருமூக்கீச்சரம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|