|
||||||||
இரண்டாம் திருமுறை-121 |
||||||||
2.121.திருப்பாதிரிப்புலியூர்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்.
தேவியார் - தோகையம்பிகையம்மை.
2780 முன்னநின்ற முடக்கான்
முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா
திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந்
தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக்
கையைப்பெறு வார்களே.
2.121. 1
முடங்கிய கால்களை உடைய முயலுருவத்தைப் பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து, நீண்ட புன்னைமரங்கள் மணம் கமழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனை வணங்கும் மேலான தவம் இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப் பெறுவார்கள்.
2781 கொள்ளிநக்க பகுவாய
பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட்
டுறையும் முதல்வன்இடம்
புள்ளினங்கள் பயிலும்
பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல்
வினையாயின ஒழியுங்களே.
2.121. 2
நகும் போது தீயை உமிழும் திறந்த வாயை உடைய பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடுகாட்டில் உறையும் இறைவன் இடமாகிய, அன்னம், மயில் முதலிய பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய வினைகளை ஒழியுங்கள்.
2782 மருளினல்லார் வழிபாடு
செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில்
பாதிரிப் புலியூருளான்
வெருளின்மானின் பிணை
நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளிஆகத் திடைவைத்
ததுவும் மழகாகவே.
2.121.3
மெய்ப்பொருளை அறிந்தவரும் மயக்கமற்ற ஞானியரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிப்புலியுல் வாழம் மழவாளரைக் கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய பார்வதியை நோக்கி, அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து, தம் ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள அப்பெருமான் செயல்மிக்க அழகானதாகும்.
2783 போதினாலும் புகையாலும்
உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு
செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம்
மிலாதஅடி கள்மறை
ஓதிநாளும் இடும்பிச்சை
யேற்றுண் டுணப்பாலதே.
2.121. 4
மலர்கள் தூவியும் தசாங்கம் முதலிய மணமுடைய பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள் தோறும் வேதங்களை ஓதிக் கொண்டு சென்று அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர்.
2784 ஆகநல்லார் அமுதாக்க
வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந்
தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும்
பாதிரிப் புலியூர் தனுள்
பாகநல்லா ளொடுநின்ற
எம்பர மேட்டியே.
2.121. 5
நுகர்ச்சிக்குரிய இளமகிளிர் பயிலும் பாதிரிப்புலியூரில் பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள பரமேட்டி உடலின் இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை உண்டவன். நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையில் கட்டியவன்.
2785 மதியமொய்த்த கதிர்போ
லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ்
பாதிரிப் புலியூரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை
தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ்
செய்வர் குழகாகவே.
2.121. 6
பழ அடியார்கள் அழகாக ஆகம விதிகளின்படி வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று வெண்மணல் பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள் திகழும் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி உள்ளார் இறைவர்.
2786 கொங்கரவப் படுவண்
டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின்
னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர்
பாதிரிப் புலியூர்தனுள்
அங்கரவம் அரையில்
அசைத்தானை அடைமினே.
2.121. 7
பூந்தாதுகளின் வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச் சோலைகளில் சங்குகளின் ஒலி, பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி ஆரவாரம் மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்து எழுந்தருளிய பரமனை அடையுங்கள்.
2787 வீக்கமெழும் மிலங்கைக்
கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ்
விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனற்
பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந் தணுகா
வினைநுணு குங்களே.
2.121. 8
பெருமை மிக்க இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும்.
2788 அன்னந்தாவும் மணியார்
பொழின்மணியார் புன்னை
பொன்னந் தாதுசொரி
பாதிரிப் புலியூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன்
றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத
தோர்தவ நீதியே.
2.121. 9
அன்னங்கள் விளையாடும் அழகிய சோலைகளில் முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச் சொரியும் திருப்பாதிரிப்புலியூரில், முற்காலத்தே எல்லா உலகங்களையும் தாவி மூன்றடியால் அளந்த திருமாலும், நான்முகனும், சிறிதேனும் திருத்தாளையும் திருமுடியையும் அறிய முடியாதவராய்த் தவத்தின் நேரிய நீதி வடிவினராய்ப் பெருமான் விளங்குகிறார்.
2789 உரிந்தகூறை யுருவத்
தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன்
பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள்
ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல்
பாதிரிப்புலி யூரையே.
2.121. 10
ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும், புத்தரும் எரிவினால் சொல்லும் உரைகளைக் கொள்ளாது. திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப்புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள்.
2790 அந்தண்நல் லாரகன்
காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில்
பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்தி
வைதரித் தார்கண்மேல்
வந்துதீயவ் வடையாமை
யால்வினை மாயுமே.
2.121. 11
அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தன், நல்லவர் வாழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய இத்திரருபதிகத்தை ஓதி வழிபடுவாரைத் தீமைகள் அணுகா. அவர்தம் வினைகள் மாயும்.
திருச்சிற்றம்பலம்
2.121.திருப்பாதிரிப்புலியூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|