|
||||||||
இரண்டாம் திருமுறை-122 |
||||||||
2.122.திருப்புகலி
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2791 விடைய தேறி வெறிஅக் கரவார்த்த
விமலனார்
படைய தாகப் பரசு தரித்தார்க்
கிடமாவது
கொடை யிலோவார் குலமும் உயர்ந்தம்
மறையோர்கள்தாம்
புடைகொள் வேள்விப் புகையும்ப ருலாவும்
புகலியே.
2.122. 1
விடைமீதுஏறி, முடைநாறும் எலும்பு, பாம்பு இவற்றை மாலையாக அணிந்துவரும் விமலரும், மழுவைப் படைக் கலனாகக் கொண்ட வரும் ஆகிய சிவபிரானுக்குரிய இடம், கொடை வண்மை, குன்றா மரபினரும் ஆகிய, உயரிய, வேதங்களில் வல்ல அந்தணர் வேட்கும் வேள்விப்புகை வானத்து உலாவும் புகலிப் பதியாகும்.
2792 வேலை தன்னின் மிகுநஞ்சினை யுண்டிருள்
கண்டனார்
ஞால மெங்கும் பலிகொண் டுழல்வார்
நகராவது
சால நல்லார் பயிலும் மறைகேட்டுப்
பதங்களைச்
சோலை மேவுங் கிளித்தான் சொற்பயிலும்
புகலியே.
2.122. 2
கடலில் தோன்றிய மிக்க நஞ்சினை, உண்டு இருண்ட கண்டத்தினரும், உலகெங்கும் பலியேற்றுத் திரிபவருமான சிவபிரானுக்குரிய நகர், மிகவும் நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக் கேட்டு, சோலைகளில் வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும்.
2793 வண்டு வாழுங் குழல்மங்கை யோர்கூ
றுகந்தார்மதித்
துண்ட மேவுஞ் சுடர்த்தொல் சடையார்க்
கிடமாவது
கெண்டை பாய மடுவில் லுயர்கேதகை
மாதவி
புண்ட ரீகம் மலர்ப்பொய்கை நிலாவும்
புகலியே.
2.122. 3
வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை நங்கையை தன் மேனியின் ஒரு கூறாக உகந்தவரும், பிறைமதி அணிந்த ஒளி மயமான தொல்சடை முடியினரும், ஆகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக்களையும், தாழை, மாதவி மரங்களையும், தாமரை மலரும் பொய்கைகளையும் கொண்ட புகலியாகும்.
2794 திரியு மூன்று புரமும் எரித்துத்
திகழ்வானவர்க்
கரிய பெம்மான் அரவக் குழையார்க்
கிடமாவது
பெரிய மாடத் துயருங் கொடியின்
மிடைவால்வெயிற்
புரிவி லாத தடம்பூம் பொழில்சூழ்
தண்புகலியே.
2.122. 4
வானத்தில் திரிந்து இடர்விளைத்த முப்புரங்களை எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக் குழை அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால் வெண்மையான வெயிலொளி புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும் புகலியாகும்.
2795 ஏவி லாருஞ் சிலைப்பார்த் தனுக்கின்
றருள்செய்தவர்
நாவி னாண்மூக் கரிவித்த நம்பர்க்
கிடமாவது
மாவி லாருங் கனிவார் கிடங்கில்
விழவாளைபோய்ப்
பூவி லாரும் புனற்பொற்கை யில்வைகும்
புகலியே.
2.122. 5
கணை பொருந்திய வில்லில் வல்ல அருச்சுனனுக்கு அருள் செய்தவரும், கலைமகளின் மூக்கை அரிவித்தவரும், ஆகிய சிவபிரானுக்குரிய இடம், மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக் கண்டு வாளைமீன்கள் பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்றடையும் புகலிப்பதியாகும்.
2796 தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
தையலாளொடும்
ஒக்க வேயெம் முரவோ னுறையும்
மிடமாவது
கொக்கு வாழை பலவின் கொழுந்தண்
கனிகொன்றைகள்
புக்க வாசப் புன்னை பொன்றிரள் காட்டும்
புகலியே.
2.122. 6
தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும், எம் உரவோனும் ஆகிய சிவபிரான் தையலாளொடு உறையும் இடம், மா, வாழை, பலா ஆகிய கனிகளின் மணத்துடன் கொன்றை, புன்னை இவற்றின் மகரந்தம் பொன்திரள் போலத்தோன்றும் புகலியாகும்.
2797 தொலைவி லாத அரக்கன் உரத்தைத்
தொலைவித்தவன்
தலையுந் தோளுந் நெரித்த சதுரர்க்
கிடமாவது
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்குக்
கரப்பிலார்
பொலியு மந்தண் பொழில்சூழ்ந் தழகாரும்
புகலியே.
2.122. 8
அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவனது தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவபிரானுக் குரிய இடம், கலை உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத வண்மையுடையயோ விளங்கும் பொழில் சூழ்ந்த புகலிப் பதியாகும்.
2798 கீண்டு புக்கார் பறந்தார் அயர்ந்தார்
கேழலன்னமாய்க்
காண்டு மென்றார் கழல்பணிய நின்றார்க்
கிடமாவது.
நீண்ட நாரை யிரையாரல் வாரநிறை
செறுவினிற்
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண்
புகலியே.
2.122. 9
கேழலாய் நிலத்தை அகழ்ந்து சென்ற திருமால், அன்னமாய்ப் பறந்து உயர்ந்து சென்ற நான்முகன் ஆகியோர் அடிமுடி காண்போம் எனச்சூளுரைத்து முயன்று தோற்றுக் கழல்பணிய நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள் ஒழுகி ஓட, நிறைந்த சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலிப்பதியாகும்.
2799 தடுக்கு டுத்துத் தலையைப் பறிப்பாரொடு
சாக்கியர்
இடுக்க ணுய்ப்பா ரிறைஞ்சாத வெம்மாற்
கிடமாவது
மடுப்ப டுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர்
வானுளோர்
அடுத்த டுத்துப் புகுந்தீண்டு மந்தண்
புகலியே.
2.122.10
ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக் கொண்டும் தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர்களும் இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம்பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, வேதம் வல்ல அந்தணரும் வானுலகில் வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும்.
2800 எய்த வொண்ணா இறைவன் னுறைகின்ற
புகலியைக்
கைதவ மில்லாக் கவுணியன் ஞான
சம்பந்தன்சீர்
செய்த பத்தும் மிவைசெப்ப வல்லார்
சிவலோகத்தில்
எய்தி நல்ல விமையோர்க ளேத்த
இருப்பார்களே.
2.122.11
உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன் உறையும் புகலியை, வஞ்சனையற்ற கவுணியர்குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்புடன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை, செப்பவல்லவர் சிவலோகத்தை அடைந்து நல்ல தேவர்கள் ஏத்தப் புகழுடன் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்
2.122.திருப்புகலி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|