|
||||||||
இரண்டாம் திருமுறை-18 |
||||||||
2.018.திருமருகல்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்.
தேவியார் - வண்டுவார்குழலி.
1655 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. 2.018. 1
நீர்நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே! இப்பெண், சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கிவிழுகின்றாள். உன்னையே நினைந்து புலம்பும் இவள் மன வருத்தத்தைப் போக்காதிருத்தல் உன்பெருமைக்குத் தக்கதோ?
1656 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. 2.018. 2
பூங்கொத்துக்கள் குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய எம் தந்தையே! இவள் உன்னை நினைந்து, “சிந்தையில் நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும், எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும், முதல்வனே” என்றும் புலம்பி நைகின்றாள். இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?
1657 அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 2.018. 3
ஒலிக்கின்ற வீரக்கழலையும், கொடிய விடம் பொருந்திய வாயினை உடைய பாம்பையும் பிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை அவள் முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவ ந்தாயே! இது தகுமோ?
1658 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. 2.018.4
முழங்கிவந்த கங்கையைத் தன் சடைமிசை மறைத்தவனே! உலகெங்கணும் சென்று பலியேற்றுத் திரிபவனே! குற்றம் அற்ற புகழாளனே! நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே! இப்பெண்ணை மெலியும் நீர்மையள் ஆக்கவும் விரும்பினையோ?
1659 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. 2.018. 5
தௌந்த நீல நிறம் பொருந்திய மேகம் தோன்றினாற் போன்ற அழகிய நீலகணட்த்தை உடையவனே! திருமருகலை வந்தடைந்த, நீலவண்டுகளின் தொகுதியோ எனக் கருதக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின் ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?
1660 பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே. 2.018. 6
பலராலும் பரவிப் போற்றப் படுபவனே! சடையின் மேல் விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை வந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறுகிறாள்.அடியவளாகிய இவள்மீது பழிமொழி வருவது தக்கதோ?
1661 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே. 2.018. 7
மழுப்படையை உடையவனே! மருகற் பெருமானே! தவறாமல் ‘பெருமான் திருவடிகள் வாழ்க’ என்று கூறிக் கொண்டே துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவளாகிய இவளைத் துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?
1662 இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக் கினையே. 2.018. 8
இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலைமலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு, விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே! மாலைசூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?
1663 எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே. 2.018. 9
நெருப்புப் போலச் சிவந்த சடையையும், அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர் அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக இத்தலத்துக்குவந்த இவளைத் துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?
1664 அறிவில் சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே. 2.018. 10
அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும் நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர். மான்கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே! உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச்செய்தீரே, இது தகுமோ?
1665 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 2.018. 11
தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான் திருவடிகளை உயர்ஞானம் உணர்ந்து நினைதலால் பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித் தோன்றும்.
திருச்சிற்றம்பலம்
2.018.திருமருகல் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|