|
||||||||
மூன்றாம் திருமுறை-5 |
||||||||
3.005.திருப்பூந்தராய்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
2845 தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன் தானே
3.005.1
சிவனை மதியாது தக்கன் செயத் யாகத்தைத் தகர்த்தவனாகிய, திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த சிறப்புடைய, இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின் பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள். அனைத்துயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற, அனைவராலும் விரும்பப்படுகின்ற அச்சிவ பெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான்.
2846 புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
மூலம் ஆய முதலவன் தானே
3.005.2
பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி யுள்ள விகிர்தனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும். ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான்.
2847 வேந்த ராய்உல காள விருப்புறின்
பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி உள்கிடச்
சாதி யாவினை யான தானே
3.005.3
நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால் திருப்பூந்தராய் என்னும் தலத்தில எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள். மேலும் அத்திருவடிகளை விதிமுறைப்படி நினைத்து, போற்றித் தியானித்தால் வினைகள் தம் தொழிலைச் செய்யா. எனவே பிறவி நீங்கும். வீடுபேறு உண்டாகும்.
2848 பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்இ றையே 3.005.4
இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான். "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" (குறள் -7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது.
2849 பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினையோட வீடுசெய்
எந்தை யாயஎம் மீசன் தானே
3.005.5
எலும்பு மாலைகளைத் தன் திருமேனியில் அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை, நிறைந்த உள்ளத்தோடு வணங்கிட, நம் அனைவர்க்கும் தந்தையாகிய அவ்விறைவன், நீங்கள் முன்பு ஈட்டிய சஞ்சிதவினையைப் போக்குதலோடு, இனிமேல் வரும் ஆகாமிய வினையும் ஏறாதபடி செய்து வீடுபேறு அருளுவான். தத்தம் கால எல்லைகளில் நீங்கிய திருமால், பிரமன் இவர்களின் எலும்புகளைச் சிவபெருமான் மாலையாக அணிந்துள்ளது சிவனின் அநாதி நித்தத்தன்மையையும், யாவருக்கும் முதல்வனாம் தன்மையையும் உணர்த்தும்.
2850 பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே
3.005.6
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி வணங்க, குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நீண்ட சடைமுடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான்.
2851 புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றிவாழும் பரமனைப் பாடிடப்
பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன் தானே
3.005.7
புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து, திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, அனைவருக்கும் மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க, விடையேறும் செல்வனான அவன், நாம் மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான்.
2852 போத கத்தூரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞ கனே
3.005.8
யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்தான்.
2853 மத்தம் ஆனஇருவர் மருவொணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆளதாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந் தானே
3.005.9
தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திருமாலும், பிரமனும், அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவபெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை அவனுக்கு ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடையுங்கள. அவன் தானே வந்து உங்கள் வினைகள் அழியுமாறு அருள்புரிவான்.
2854 பொருத்த மில்சமண் சாக்கியக் பொய்கடிந்
திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்இ றையே 3.005.10
வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர், புத்தர்களின் பொய்யுரைகளை ஒதுக்கி, விண்ணோர்கள் வணங்கும் படி வீற்றிருக்கும் கடவுள், திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான்.
2855 புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல்எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறி டுமே
3.005.11
உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத் திருஞானசம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள். உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
3.005.திருப்பூந்தராய் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|