|
||||||||
இரண்டாம் திருமுறை-25 |
||||||||
2.025.திருப்புகலி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1731 உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 2.025. 1
“தாவிச்செல்லும் அலைகளை உடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட உலகின்கண் வாழ்பவர்களே, தன்னோடு மாறுபட்ட அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சிவபிரான் உறையும் புகலி என்ப்பெயர் பெற்ற சீகாழிப்பதியைப் போற்றி வழிபடுங்கள்”. வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போகும்.
1732 பண்ணி யாள்வதோ ரேற்றர் பான்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே. 2.025. 2
நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின், அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால் போன்ற வெண்மையான பிறை மதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும் கொன்றை மாலைசேர்ந்த முடியினனும் ஆகிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து வழிபடுங்கள்.
1733 வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே. 2.025.3
இன்பம் பெரிதாக விளையவேண்டின், ஒளிவீசும் மின்னல் போன்ற அணிபூண்ட காதினனும், பற்றுக்கள், வலிய வினைகள் ஆகியவற்றைப் போக்கிய மேதகு பண்பினனும், திருநீறு பூசியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய புகலிப்பதியை அடைந்து அவனைப்புகழ்ந்து பேசுங்கள்.
1734 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிக ளையடைந் தன்பு செய்யுமே. 2.025. 4
மணம் கமழும் வில்வம், ஊமத்தைமலர் ஆகியவற்றை முடிமிசைச் சூடியவனும், பெரிதான இவ் வுலகில் உள்ளோர் புகழ்ந்து போற்றும் தன்மையாளனும், திருநீற்றுப்பொடி பூசிய மேனியனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை அடைந்து அங்கு மேவிய பெருமானிடம் அன்பு செய்யுங்கள்.
1735 பாதத் தாரொலி பல்சி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 2.025. 5
பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல சிலம்புகளை அணிந்தவனும், பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை உண்டவனும், பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப் பதியை அடைந்து தொழ, துன்பங்கள் வருவதற்கு இடம் இல்லை யாகும்.
1736 மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறை யினானுறை யும்பு கலியை
நிறையி னால்தொழ நேச மாகுமே. 2.025. 6
வேதங்களை அருளியவனும், ஒலி நிறைந்த வீணையை உடையவனும், பூரணனாய் நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனும், எமது பொறுமையை மலராகக் கொள்பவனும், ஆகிய சிவபிரான் உறையும் புகலியையே குறிக்கொண்டு தொழ, அதுவே அன்பு வழிபாடாக அமையும்.
1737 கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டையுயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே. 2.025. 7
வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண விரும்பாதவனும், இரவில் பலியேற்கும் இயல்பினனும், எம் இறைவனும், போர் வல்ல விடைபொறித்த கொடியினனும் ஆகிய சிவபிரானது புகலியைப் பரவ நாம் செய்த பாவங்கள் அழியும்.
1738 அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 2.025.8
தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், தன்மீது விருப்பினன் ஆயினும் செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்த்த கயிலைமலையினனும், பொழில் சூழ்ந்த புகலியூரைத்தன் இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை ஏத்தி வாழ்த்துங்கள்.
1739 மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே. 2.025.9
திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரி போலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.
1740 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாஉ ணர்வினுள்
நின்ற வன்நிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே. 2.025. 10
நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள், தேரர்களாகிய பௌத்தர்கள் உரைகளை ஒருபொருளாகக் கொள்ளாத அன்பர்களின் உணர்வினுள் நிற்கும் சிவபிரான் எழுந்தருளிய புகலியைச் சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம்.
1741 புல்லம் மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லு மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை யிருநி லத்துளே. 2.025.11
விடைமீது ஏறி வருபவனாகிய சிவபிரானது அழகிய புகலியை நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால் போற்றிச் சொல்லிய தமிழ் மாலையாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்க்கு அகன்ற இந்நிலவுலகத்தில் வினைகள் இல்லை.
திருச்சிற்றம்பலம்
2.025.திருப்புகலி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|