|
||||||||
இரண்டாம் திருமுறை-26 |
||||||||
2.026.திருநெல்வாயில்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர்.
தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
1742 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே. 2.026. 1
வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும், வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தௌந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால்விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடிமேல் திகழும் மாண்பினர்.
1743 வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே. 2.026. 2
முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை, வளைத்தவர். பெருகிவந்த கங்கைநீரைச் சடைமிசைத் தாங்கியவர். மேலான தன்மைகளை உடையவர். ஓடும் நீரினைஉடைய நெல்வாயில் என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்.
1744 நிச்ச லேத்துநெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் ஈசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே. 2.026. 3
நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல் வாயிலில் இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர். உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.
1745 >மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே. 2.026.4
வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை உடையவர். சடைமுடியில் பொருந்திய பிறையினை உடையவர். வானளாவ வளர்ந்து, நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால், நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர். நம்மால் தொழத்தகும் இறைவர். அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்.
1746 விருத்த னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயின் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே. 2.026. 5
முதியவராய்த் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவர். தீயில் ஆடுதலை உகந்தவர். நடனம் புரிபவர். நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும் பெயருக்கு உரியவர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.
1747 காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயி லார்தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே. 2.026. 6
கார்காலத்தில் மலரும் கொன்றைமலரால் இயன்ற கண்ணியைச் சூடியவர். நிறைந்த புகழை உடையவர். பிறைசூடி விளங்கும் இயல்பினர். நெல் வாயிலில் உறைபவர். நாம் தொழத்தகும் அழகர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.
1748 ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே. 2.026.7
உலகிற்கு ஆதிஅந்தமாக விளங்குபவர். குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.
1749 பற்றி னானரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே. 2.026.8
கயிலைமலையைப் பற்றி எடுத்த இராவணனை ஒருகால் விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர். நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது உச்சியில் உறைபவர்.
1750 நாடி னார்மணி வண்ண னான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே. 2.026. 9
நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும், நான்முகனும் கூடித் தேடிக்குறுக முடியாத இயல்பினராய் எரி உருவொடு நீடியவர். நெல்வாயிலில் எழுந்தருளி யிருப்பவர். தலை ஓட்டைக் கையில் உடையவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.
1751 குண்ட மண்டுவர்க் கூறை மூடர்சொற்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் முச்சி யாரே 2.026. 10
குண்டர்களாகிய சமணர்களும், துவர் ஏற்றிய ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாத பண்பினர். வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள் நிறைந்த நெல் வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர். அவர் எமது உச்சியார்.
1752 நெண்ப யங்குநெல் வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன்சொல் லிவை
பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. 2.026. 11
நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக்கொண்டு விளங்கும் ஈசனை, சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய சால்மாலையாகியஇத்திருப்பதிகத்தைப் பண்ணின்பயன் கொள்ளுமாறு பாடி வழிபட வல்லவர், வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.026.திருநெல்வாயில் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|