|
||||||||
இரண்டாம் திருமுறை-27 |
||||||||
2.027.திருஇந்திரநீலப்பருப்பதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - நீலாசலநாதர்.
தேவியார் - நீலாம்பிகையம்மை.
1753 குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்து மங்கையர்
நிலவு மிந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னானடி யுள்க நல்குமே. 2.027. 1
விளங்கும் மான் மழுஏந்திய அகங்கையாளனாய்த் தன்னிடம் அன்பு செய்யும் பூதகணங்கள் போற்ற, விளங்கித் தோன்றும் இந்திர நீலப்பர்வதத்து வீற்றிருந்து உலாவுகின்ற சிவபிரான் தன் திருவடிகளை நினைவார்க்கு அருள் புரிவான்.
1754 குறைவி லார்மதி சூடி யாடல்வண்
டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
இறைவ னிந்திர நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை யோதி யுய்ம்மினே. 2.027.2
மேலும் குறைதல் இன்றி என்றும் ஒரு கலையாய் நிறைவுபெறும் பிறையை, வண்டுகள் இசைக்கும் சிறந்த கொன்றை மலர் சூடிய சென்னியில் சேர்த்துள்ள இறைவனும்,இந்திரநீலப் பருவதத்து உறைபவனுமாகிய சிவபிரானைப் போற்றி உய்யுங்கள்.
1755 என்பொ னென்மணி யென்ன வேத்துவார்
நம்ப னான்மறை பாடு நாவினான்
இன்ப னிந்திர நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே. 2.027.3
என் பொன்னே என்மணியே என்று புகழ்ந்து போற்றுவாரை விரும்புபவன், நான்கு மறைகளையும் பாடும் நாவினை உடையவன், இன்பவடிவினன், இந்திரநீலப் பர்வதத்து அன்பு உடையவன் ஆகிய சிவபிரான் திருவடிகளையே சரணாக அடைந்து வாழுங்கள்.
1756 நாச மாம்வினை நன்மை தான்வரும்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈச னிந்திர நீலப் பர்ப்பதம்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. 2.027.4
நம் வினைகள் நாசமாகவும், நன்மைகளே வந்தெய்தவும், உலகளாவிய புகழுடைய செம்மையாளனாகிய எம் ஈசனும் இந்திரநீலப் பருவதத்து உறைவோனுமாகிய சிவபிரானை, நும் சிறுமையையும் அவன் பெருமையையும் எண்ணி நற்குணங்கள் பலவும் அமைய வாழ்த்துங்கள்.
1757 மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவ னிந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடு மடிகள் வண்ணமே. 2.027. 5
இந்திர நீலப்பருவதத்து இறைவனது இயல்பு அருவிகளை மாலையாகச் சூடி மகிழ்வதோடு தன்னைமருவிய மான்போன்ற கண்ணளாகிய உமையம்மை ஒருபாகமாக விளங்க, தன்னைப் பரவுவார் வினைகளைப் போக்குவதாகும்.
1758 வெண்ணி லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ண லிந்திர நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறு மொருவ னல்லனே. 2.027. 6
வெண்மையான நிலவைத் தரும் மதியைச் சூடும் சடையினனும் பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும், தலைமையாளனும் ஆகிய இறைவன், இந்திரநீலப்பருவதத்துள் விளங்கும் ஒருவன் அல்லனோ?.
1759 கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
உடைய வாண னுகந்த கொள்கையே. 2.027. 7
கொடியில் கொண்ட விடையை உடையவர். எமனை உதைத்தவர். பொடியணிந்த மேனியில் பாம்பினை அணிந்தவர், தலைவர். இந்திரநீலப் பருவதத்துள் வாழும் இறைவனின்இயல்புகள் இவையாகும்.
1760 எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர லானவ னையாட்
படுத்த னிந்திர நீலப் பர்ப்பதம்
முடித்த லம்முற முயலு மின்பமே. 2.027. 8
கயிலை மலையை எடுத்த இராவணனின் கைகள் தோள்கள் ஆகியவற்றை அடர்த்த விரலால் அவ்விராவணனை ஆட்படுத்தியவன் உறையும் இந்திர நீலப்பருவதத்தை முடிகளால் வணங்க இன்பம் எளிதின் வாய்க்கும்.
1761 பூவி னானொடு மாலும் போற்றுறும்
தேவ னிந்திர நீலப் பர்ப் பதம்
பாவி யாவெழு வாரைத் தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. 2.027. 9
தாமரை மலரில் எழுந்தருளிய பிரமனோடு திருமால் போற்றி வணங்கும் தேவனாகிய இந்திரநீலப் பருவதத்துள் உறையும் இறைவனை நினையாதவரை வினைகள் சினக்கும். கூற்றம்கொல்லும்.
1762 கட்டர் குண்டமண் டேரர் சீரிலர்
விட்ட ரிந்திர நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே. 2.027. 10
கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய சமண புத்தர்கள் சிறப்பற்றவர். நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை விடுத்து இந்தி லப் பருவதத்து உறையும் மேலான ஆதியின் சீர்களை எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?.
1763 கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்றொழு நீலப் பர்ப்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே. 2.027. 11
மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப் பதியானாகிய ஞானசம்பந்தன் இந்திரனால் வழிபடப் பெற்ற நீலமலையில் விளங்கும் அந்தம் இல்லாத பெருமானை ஏத்திய பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள்.
திருச்சிற்றம்பலம்
2.027.திருஇந்திரநீலப்பருப்பதம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|