|
||||||||
இரண்டாம் திருமுறை-29 |
||||||||
2.029.திருப்புகலி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1775 முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னியிமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 2.029. 1
பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும் சிவபிரானின் பழமையான ஊர் யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர் எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்.
1776 வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 2.029. 2
வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண் ஏந்தி ஆடும் பரமனது பதி தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும் சோலைகள் சூழ்ந்ததும், தௌந்த அலைகளை உடைய கடலில் தோணியாக மிதந்து பொலிந்ததும் ஆகிய திருப்புகலியாகும்.
1777 பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருண் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே. 2.029. 3
இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள், பத்தர்களோடு கூடிப்பரவ, அவர்தம் நாவில் உறையும் அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம், பூக்கள் நிறைந்த சோலையில் இருளைத்தரும் மாலைப்போதுவர தெய்வத்தொடர்பான விழாக்கள் நிகழும் திருப்புகலி எனக்கூறுவர்.
1778 மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழு முருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே. 2.029. 4
கருமை நிறம் பொருந்திய மிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள் பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும்.
1779 முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே. 2.029. 5
முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச் சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும்.
1780 வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கண னருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே. 2.029. 6
மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற்கடலில் தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்.
1781 நல்குரவு மின்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரவிசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 2.029.7
வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியன வற்றைத் தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள் நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்.
1782 பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளு மண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 2.029. 8
பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்.
1783 கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பனிரு வர்க்கும்
நேடவெரி யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 2.029. 9
காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும், திரு மால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள்கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும்.
1784 கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 2.029. 10
கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும் விரும்பும் திருப்புகலியாகும்.
1785 செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 2.029.11
செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப் புகலியில் எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப் பரவுவார், வீடு பேற்றுக்கு உரியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.029.திருப்புகலி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|