|
||||||||
மூன்றாம் திருமுறை-7 |
||||||||
3.007.திருப்புகலி
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2867 கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ
லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ்
சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக
லிந்நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந் தபெரு
மானன்றே
3.007.1
நெற்றிக் கண்ணையுடையவனும், திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவனும், திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப்பண்ணுடன் இசைபாட நடனம் ஆடுபவனும் ஆகி, மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள், சிவபுண்ணியர்களாகிய, நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப் புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான்.
2868 சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை
யின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு
வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக
லிந்நகர்க்
காம்பன தோளியொ டும்மிருந் தகட
வுளன்றே
3.007.2
மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும், சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும், இடபவாகனத்தில் ஏறியுள்ளவனுமான சிவபெருமான், மலர்ப்பொய்கையில் இள வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில், மூங்கில் போன்ற தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான்.
2869 கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக்
கண்டானும்
மருப்புநல் லானையி னீருரி போர்த்தம
ணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக
லிந்நகர்
விருப்பினல் லாளொடும் வீற்றிருந் தவிம
லனன்றே 3.007.3
நல்ல நீண்ட கரும்பு வில்லையுடைய மன்மதன் எரியும்படி நெற்றிக் கண்ணால் விழித்தவனும், அழகிய தந்தத்தையுடைய யானையின் வலிய தோலினை உரித்துப் போர்த்திக் கொண்ட மணாளனுமாகிய சிவபெருமான், மலைகள் போன்று உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில் தன்மீது விருப்பமுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனேயாவான்.
2870 அங்கையி லங்கழ லேந்தினா னும்அழ
காகவே
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட
லின்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக
லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண
வாளனே
3.007.4
உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும், அழகுறக் கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும், திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவனும், திருப்புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான்.
2871 சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித
கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழு
நாதனும்
பூமல்கு தண்பொழின் மன்னுமந் தண்புக
லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ
கனன்றே
3.007.5
நல்ல சாமவேதத்தை அருளியவனும், சிவனை நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும், நூறாயிரம் திருநாமங்களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும், பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் நிலைபெற்றிருக்கும் அழகும், குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில் அழகிய இளம்பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவபெருமானேயாவான்.
2872 இரவிடை யொள்ளெரி யாடினா னும்இமை
யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ
லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக
லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தவழ
கனன்றே
3.007.6
மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில் ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும், தேவர்கள் தொழுது வேண்டப் போர் முகத்தில் முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோகநாதனும், இடபவாகனத்தில் உகந்து ஏறியவனும், திருப்புகலி நகரில் பாம்புபோன்ற இடையினையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவபெருமானேயாவான்.
2873 சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ்
பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள்
விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக
லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர
மனன்றே
3.007.7
திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவனும், பாலனான மார்க்கண்டேயர் மீது சினம் கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும், வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும் எல்லோருக்கும் மேலானவனான சிவபெருமானே யாவான்.
2874 கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர்
கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச
யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக
லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொ டும்அமர்ந்
தானன்றே
3.007.8
கல் போன்று திண்ணிய நெடிய பெரிய திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தானும், வில்லேந்திப் போர்புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு பொன்மயமான பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும், அழகிய குளிர்ச்சியான திருப்புகலி நகரில் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவனான சிவபெருமானேயாவான்.
2875 பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர்
புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற்
சோதியும்
புன்னைபொன் றாதுதிர் மல்குமந் தண்புக
லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம
லனன்றே
3.007.9
பொன்னிறப் பிரமனும், பச்சைநிறத் திருமாலும் என்ற இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை இன்னானெனக் காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற பெருமான், புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்க அழகிய, குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற இடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானேயாவான்.
2876 பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப்
பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச்
சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக
லிந்நகர்
வண்டமர் கோதையோ டும்மிருந் தமண
வாளனே
3.007.10
அசோக மரத்தையும், அரசமரத்தையும் போற்றும் சமணர்கள், புத்தர்கள், சொல்லும் உரைகளைப் போற்றாது ஒப்பற்ற தொண்டர்கள் பக்தியுடன் வழிபாடு செய்கின்ற சோதிச் சுடராய் ஒளிரும் இறைவன் தாமரைகள் மலரும் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியோடு எழுந்தருளியுள்ள மணவாளனான சிவபெருமானேயாவான்.
2877 பூங்கமழ் கோதையோ டும்மிருந் தான்புக
லிந்நகர்ப
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ்
பத்திவை
ஆங்கமர் வெய்திய வாதியா கவிசை
வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வது
முண்மையே
3.007.11
பூ மணம் கமழும் கூந்தலையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்ட திருப்புகலி நகர் இறைவனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ்ப்பாக்கள் பத்தினைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித் துதிக்க வல்லவர்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும் தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது உண்மையே ஆகும்.
திருச்சிற்றம்பலம்
3.007.திருப்புகலி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|