|
||||||||
மூன்றாம் திருமுறை-11 |
||||||||
3.011.திருப்புனவாயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புனவாயிலீசுவரர்.
தேவியார் - கருணையீசுவரியம்மை.
2910 மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி
நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல
வூர்கள்போய்
அன்னமன் னந்நடை யாளொ டும்மம
ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன
வாயிலே
3.011.1
மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும், வெண்மையான பிறைச்சந்திரனும், விரிந்த மார்பினில் முப்புரிநூலும் கொண்டு, அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியாடிப் பல திருத்தலங்கட்கும் சென்று, அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது, புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் ஆகும்.
2911 விண்டவர் தம்புர மூன்றெரித் துவிடை
யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந்
தானிடம்
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற்
கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன
வாயிலே
3.011.2
பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி, வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து, இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாவது, தாழையும், புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில் ஆகும்.
2912 விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற்
பாரிடம்
புடைபட வாடிய வேடத்தா னும்புன
வாயிலில்
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர்
வெண்மழுப்
படைவல னேந்திய பால்நெய்யா டும்பர
மனன்றே
3.011.3
இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும், வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான சிவபெருமான் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, கொன்றை மாலை அணிந்து, ஒளியுடைய மழுப்படையை வலக்கையிலே ஏந்தி, பாலாலும், நெய்யாலும் திருமுழுக்காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும் பரம்பொருள் ஆவான்.
2913 சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை
தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ
காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன
வாயிலில்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர
மேட்டியே
3.011.4
திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன். தாழ்ந்த நீண்ட சடையுடையவன். உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன். சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான்.
2914 கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக்
கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன
வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத
மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை
யூர்தியே
3.011.5
ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் கறுத்த கண்டத்தை உடையவன் சிவபெருமான். புலித்தோலை ஆடையாகவும், பாம்பை அரையில் கச்சாகவும் கட்டியவன். அவன் திருப்புனவாயில் என்னும் தலத்தில், ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு, எருக்கு, ஊமத்தம் ஆகிய மலர்களையும், மெலிந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் சடையில் சூடி இடப வாகனத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
2915 வாருறு மென்முலை மங்கைபா டநட
மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல்
வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன
வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ
லோகனே
3.011.6
கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவி பாட, அதற்கேற்ப நடனம் ஆடி, கார்காலத்தில் மலர்கின்ற கொன்றைமலரையும், வெண்ணிறத் திங்களையும் சடையிலே சூடி, நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப் பயன்படும் வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய சிவபெருமான் தன் அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான்.
2916 பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங்
காட்டிடைத்
திருத்திள மென்முலைத் தேவிபா டந்நட
மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன
வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர்
இல்லையே
3.011.7
சிவபெருமான், பெரிய பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன். சுடுகாட்டில் இளமென் முலையுடைய உமாதேவி பாட நடனமாடியவன். பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை.
2917 மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி
ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட
மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின்
மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன
வாயிலே
3.011.8
செருக்குடைய மனம் உடையவனும், வேல், வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு, அழகும், பெருமையுமுடைய கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, அவனுடைய பழம்புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகுற விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும்.
2918 திருவளர் தாமரை மேவினா னும்திகழ்
பாற்கடற்
கருநிற வண்ணனும் காண்பரி யகட
வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல
மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன
வாயிலே
3.011.9
அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும், விளங்கும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கரியவன் சிவபெருமான். அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும், சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும்.
2919 போதியெ னப்பெய ராயினா ரும்பொறி
யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர்
வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன
வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை
வீடுமே
3.011.10
புத்தர்களும், சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும்.
2920 பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன
வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற்
காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ்
நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள்
சேர்வரே
3.011.11
பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்புனவாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு கடல் வளமிக்க சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் இறையருளைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
3.011.திருப்புனவாயில் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|