|
||||||||
இரண்டாம் திருமுறை-35 |
||||||||
2.035.திருக்குரங்காடுதுறை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர்.
தேவியார் - அழகுசடைமுடியம்மை.
1841 பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே. 2.035. 1
பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும், அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள் கெட்டொழியும்.
1842 விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே. 2.035.2
தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
1843 நிறைவில் புறங்காட்டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே. 2.035. 3
நிறைதல் இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும் குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை.
1844 விழிக்குந் நுதன்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே. 2.035.4
விழியை உடைய நெற்றியின்மேல் தலையின் முன்பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்.
1845 நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன்
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந் தணனா யிழையாளோர்
கூறா னகர்போல் குரங்கா டுதுறையே. 2.035.5
நீறு பூசிய மேனியன். நெற்றிக் கண்ணன். விடைக்கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.
1846 நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத்
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும்
மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும்
புனல்சூழ் குரங்கா டுதுறையே. 2.035. 6
குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத் தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.
1847 பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும்
அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 2.035. 7
பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன். பார்வதி தேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
1848 வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலா னெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே. 2.035.8
கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடுதுறையாகும்.
1849 நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண்டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே. 2.035. 9
திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடு பவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.
1850 துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே. 2.035. 10
துவராடை அணிந்த புத்தர்களும், வேட மல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐய உரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.
1851 நல்லார் பயில்காழி யுண்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 2.035. 11
நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞான சம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர்.
திருச்சிற்றம்பலம்
2.035.திருக்குரங்காடுதுறை |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|