|
||||||||
மூன்றாம் திருமுறை-12 |
||||||||
3.012.திருக்கோட்டாறு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
2921 வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங்
கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி
யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக்
கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்ல
லில்லையே
3.012.1
வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான். அவ்வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான். அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை.
2922 ஏலம லர்க்குழன் மங்கைநல் லாள்இம
வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர
மேட்டியும்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்
கோட்டாற்றுள்
ஆலநீழற்கீ ழிருந்தறஞ் சொன்ன
அழகனே
3.012.2
மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான, இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான், வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான்.
2923 இலைமல்கு சூலமொன் றேந்தினா னுமிமை
யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி
கண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக்
கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ
கனன்றே
3.012.3
சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன். விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன். கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன், காய்களும், கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
2924 ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை
பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத் தமறை
யோதியும்
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை
வனன்றே
3.012.4
இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன். வேதங்களை அருளிச் செய்தவன். இடபத்தை வாகனமாக உடையவன். அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான்.
2925 வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ்
மைந்தனும்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி
செல்வனும்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக்
கோட்டாற்றுள்
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள்
நாதனே
3.012.5
சிவபெருமான் நறுமணம் கமழும் மாலை யணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன். செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன். அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன், கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன். அவனே எங்கள் தலைவன்.
2926 பந்தம ரும்விரன் மங்கைநல் லாளொரு
பாகமா
வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர்
தன்மிகும்
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை
அல்லலே
3.012.6
சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன். மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத் தலத்தில் வீற்றிருந்தருள்கின்ற, அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை.
2927 துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும் வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு பங்கனும் தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ கனன்றே 3.012.7
துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான். நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன். பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன். கடலும், நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும், எட்டுத்திசைகளுமாகி நின்ற அழகன் அல்லனோ?
2928 இரவம ருந்நிறம் பெற்றுடை யவிலங்
கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி
செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள்
செய்யுமே
3.012.8
இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க, அவன் வலிமையை அழித்த சிவபெருமான், குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி, தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான்.
2929 ஓங்கிய நாரண னான்முக னும்உண
ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம
லன்னிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்
கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம
ரனன்றே
3.012.9
செருக்குடைய திருமாலும், பிரமனும் உணரா வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான். தேவர்கட்கெல்லாம் தேவனாவான்.
2930 கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில்
லாததோர்
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத்
தன்னருள்
கொடுக்கலில் லாக்குழ கன்அம ருந்திருக்
கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை
யாவரே
3.012.10
சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும், சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால், அருள் புரியமாட்டாத அழகன் சிவபெருமான். திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடுகின்றவர்களும், தேவர்கட்குத் தலைவராவர்.
2931 கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக்
கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு
ளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம்
பந்தன்சொல்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை
பாவமே
3.012.11
இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க, திருநடனம் புரியும் அருளாளன். அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
3.012.திருக்கோட்டாறு |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|