|
||||||||
மூன்றாம் திருமுறை-13 |
||||||||
3.013.திருப்பூந்தராய்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
2932 மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளித்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே 3.013.1
மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.
2933 மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே 3.013.2
பழமையான அணிவகுப்பையுடைய முப்புரத்திலிருந்த அளவற்ற அசுரர்களை வெம்மையுடைய அம்பினால் அழித்தவராகிய சிவபெருமான், மலர்கள் நிறைந்த அழகிய சோலைகளையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் மகரந்தப் பொடிகள் தங்கிய கூந்தலையுடைய உமாதேவியின் தலைவராய் வீற்றிருந்தருளுகின்றார். அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.
2934 தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே 3.013.3
செருக்குக் கொண்ட திரிபுரத்தசுரர்கள் அழியுமாறும், தேவர்களின் இன்பம் பெருகுமாறும், மேருமலையை வில்லாகப் பிடித்த சிவபெருமான், அலைவீசுகின்ற கடல் பக்கங்களில் சூழ்ந்திருக்க, பெருமையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுவாராய், கூந்தலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருள்களெல்லாம் தமக்கு அத்தகைய நிறமும், அழகும் இல்லையே என்று வருத்தமுறும்படி அழகிய, கரிய கூந்தலையுடைய உமாதேவியின் கணவர் ஆவார். அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.
2935 நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே 3.013.4
வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், மேரு மலையை வில்லாகவும் கொண்டு, ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை அழித்த மாண்புடைய சிவபெருமான், கமுக மரங்கள் நிறைந்த சோலைகளால் அழகுடன் திகழும் திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வெல்லப்பாகு போன்று இனிமையாகப் பேசுகின்ற உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார். அவரைத் தரிசித்துப் பிறவிப்பயனை அடையுங்கள்.
2936 வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே 3.013.5
வெண்ணிறப் பற்களையுடைய அசுரர்களின் திரிபுரங்கள், ஒளி பொருந்திய நெருப்பால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் சிவபெருமான். மின்னுகின்ற பறவைகளை உடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானார் தேன்கமழும் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார். அப்பெருமானாரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள்.
2937 துங்கிய றானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி யரிவை பங்கரே 3.013.6
அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்ற தோற்றத்தையுடைய பெரிய முப்புரங்களையும், நெருப்பால் அழியுமாறு செய்த அக்கினிக் கணையை உடைய சிவபெருமான், பொங்கும் கடலையுடைய அழகிய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் அழகிய கயல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப்பயனைப் பெறுங்கள்.
2938 அண்டர்க ளுய்ந்திட வவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே 3.013.7
சிவபெருமான் எல்லா அண்டத்தவர்களும் நன்மை அடையும் பொருட்டுத் திரிபுர அசுரர்களை மாய்த்தவர். கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கருநிறக் கண்டத்தர். தாமரை மலர்கள் பூத்துள்ள வயல்களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். பூவிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு வண்டு அமர்கின்ற கூந்தலையுடைய உமாதேவியின் மணாளர் ஆவார். அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள்.
2939 மாசின வரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே 3.013.8
சிவபெருமான் குற்றம் செய்த அரக்கனான இராவணனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்தவர். கோபத்தால் பிற உயிர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த நீலகண்டர். அந்தணர்கள் நிறைந்து விளங்குகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில், வீற்றிருந்தருளும் அவர் காயாம்பூவைப் போன்ற கருநிறக் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார். அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள்.
2940 தாமுக மாக்கிய வசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமக னறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமக னெழில்பெறு மரிவை கூறரே 3.013.9
தம் விருப்பம்போல் தேவர்கட்குத் துன்பம் செய்த அசுரர்களின் மூன்று நகரங்களை வெந்தழியுமாறு செய்த விகிர்தர் சிவபெருமான். திருமாலும், பிரமனும் அறிய ஒண்ணாதவர். திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் அழகிய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர். அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.
2941 முத்தர வசுரர்கண் மொய்த்த முப்புரம்
அத்தகு மழலிடை வீட்டி னாரமண்
புத்தரு மறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே 3.013.10
சிவபெருமான் மூன்று தரத்தினராகிய அசுரர்கள் மிகுந்த முப்புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். சமணர்களாலும், புத்தர்களாலும் அறிய ஒண்ணாதவர். திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர், பூங்கொத்துக்களால் அழகுபடுத்தப்பட்ட கூந்தலையுடைய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர். அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.
2942 புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே 3.013.11
முப்புரம் எரித்த சிவபெருமான் திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் அடர்த்தியான கூந்தலையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானை ஞானசம்பந்தன் நவின்ற இம்மெய்ம்மைப் பதிகத்தால் போற்ற வல்லவர்கள் தலையானதாகக் கருதப்படுகின்ற சிவகதியை நிச்சயம் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
3.013.திருப்பூந்தராய் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|