|
||||||||
மூன்றாம் திருமுறை-17 |
||||||||
3.017.திருவிசயமங்கை
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விசயநாதேசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
2976 மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே 3.017.1
நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமா தேவியை ஒருபாகத்தில் கொண்ட, நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில், குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை ஆகும்.
2977 கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே 3.017.2
கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை உடையவரும், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான சிவபெருமானின் பொன்னகர் என்பது, இடபதேவர் வழிபட விளங்குவதும், நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும். கோதனம் வழிபட - பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர். ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த புத்தூர் என வழங்கப்பட்டதாகக் கூறுவர்.
2978 அக்கர வரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே 3.017.3
உருத்திராக்கத்தையும், பாம்பையும் அணிந்த இடுப்பையுடையவரும், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவரும், சிறந்த நல் இடபத்தை வாகனமாக உடைய சோதி வடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர், தகுதியுடைய நல்ல தேவர்களும், அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும் வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும். அக்கு - உருத்திராக்கம். இதனை “அக்கு மாலை கொடங்கையி வெண்ணுவார்” (தி.3 ப.307 பா.3) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறிக.
2979 தொடைமலி யிதழியுந் துன்னெ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே 3.017.4
கொன்றை மாலையும், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் அழகிய நகரம், மழுவை ஆயுதமாக உடையவரும், பசிய கண்களையுடைய வலிமையுடைய வெண்ணிற எருதுவை கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2980 தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ டினித மர்விடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே 3.017.5
இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன். நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன். காட்டிலே வசிக்கின்ற பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான், பூவிதழ்களை அணிந்த கூந்தலையுடைய உமாதேவியொடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2981 மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட வருள்புரி விசய மங்கையே 3.017.6
நீலோற்ப மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன். சிறந்த நெருப்புப் போன்ற திருமேனியுடையவன். எம்மை ஆளும் அவரின் நகர் நீரும், மலரும் கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும். பூவும், நீரும் கொண்டு அன்புடன் வழிபடுபவர்களின் பூசையை ஏற்று இறைவன் அருள் செய்வான் என்று கூறுவது அன்பில்லாதவர்களின் பூவையும், நீரையும் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதைப் புலப்படுத்தும். “பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே” (தி.5 ப.90 பா.9) என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கை இங்கு நினைவுகூர்க.
2982 இரும்பொனின் மலைவில்லின் எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே 3.017.7
பெரிய மேருமலையாகிய வில்லினால் எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடி செய்த பெரும் வீரமுடையவன் இறைவன். வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர் மாலையையும், தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த சடைமுடியுடைய தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
2983 உளங்கைய இருபதோ டொருபதுங் கொடாங்
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துட னெரிதர வடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே 3.017.8
தன்னுடைய வழியில் இம்மலை தடுக்கின்றது என்று மனம் கசந்து, இருபது தோள்களும், பத்துத் தலைகளும் கொண்டதால் தான் வலிமையுடையவன் என்று எண்ணி, எடுத்தற்கு அரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான இராவணன் தளர்ந்து உடல் நெரியும் படி அடர்த்த தன்மையுடைய சிவபெருமான், ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
2984 மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே 3.017.9
மண்ணினை உண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர், குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனமும், பூவும் நீரும் கொண்டு விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2985 கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே 3.017.10
கஞ்சி உண்ணும் புத்தர்களும், கவனமாக உணவு உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும் கொடியனவாகும். நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார். சிவந்த சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2986 விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம் பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே 3.017.11
விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசயமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர். அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும்.
திருச்சிற்றம்பலம்
3.017.திருவிசயமங்கை |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|