|
||||||||
மூன்றாம் திருமுறை-18 |
||||||||
3.018.திருவைகல்மாடக்கோயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வைகனாதேசுவரர்.
தேவியார் - வைகலம்பிகையம்மை.
2987 துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே 3.018.1
இறைவன், துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன். இளம்பிறையை அணிந்துள்ள சடையன். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும்.
2988 மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே 3.018.2
இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர். வேதத்தை அருளிச்செய்தவர். அவர், மை தீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில், சிவந்த கண்ணுடைய கோச்செங்கட்சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும்.
2989 கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி யுமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகன் மாடக் கோயிலே 3.018.3
வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும், மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர். அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவமாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும்.
2990 கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே 3.018.0
பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும்.
2991 விடமடை மிற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக்கோயிலே 3.018.5
இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர். வேதங்களை ஓதும் நாவினர். அவர், இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், இள அன்னப்பறவைகள் நடைபயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும்.
2992 நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரிப
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே 3.018.6
புனிதமான கங்கையையும் பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது, மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும்.
2993 எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுர மெரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே 3.018.7
அக்கினியாகிய அம்பை, மேருமலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரியுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது, வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும்.
2994 மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே 3.018.8
மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது வலிமையை அழித்து, பின்னர் அவன் சாம கானம் பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, மலர்கள் நிறைந்த சோலைகளை யுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும்.
2995 மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே 3.018.9
திருமாலும், பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள, நெருப்பு மலையாய் நின்ற, வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து, வேதங்களை ஓதி வழிபாடு செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால் அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும்.
2996 கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே 3.018.10
கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும், கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும், புத்தர்களின் பிடக நூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது, மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.
2997 மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே 3.018.11
அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
3.018.திருவைகல்மாடக்கோயில் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|