|
||||||||
இரண்டாம் திருமுறை-41 |
||||||||
2.041.திருச்சாய்க்காடு
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர்.
தேவியார் - குயிலுநன்மொழியம்மை.
1906 மண்புகார் வான்புகுவர்
மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார்
கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா
வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந்
தலைவன்றாள் சார்ந்தாரே.
2.041. 1
வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார்.
1907 போய்க்காடே மறைந்துறைதல்
புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக
வுடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே
யிடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும்
பெரியோர்கள் பெருமானே.
2.041.2
இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான்.
1908 நீநாளு நன்னெஞ்சே
நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ்
சாய்க்காட்டெம் பெருமாற்கே.
பூநாளுந் தலைசுமப்பப்
புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப்
பெறலாமே நல்வினையே.
2.041.3
நல்லநெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.
1909 கட்டலர்த்த மலர்தூவிக்
கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி
கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை
முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம்
பரமேட்டி பாதமே.
2.041. 4
பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்டவிழ்க்கப்பட்ட மலர்களைத்தூவிக் கைகூப்பி வணங்குமின்.
1910 கோங்கன்ன குவிமுலையாள்
கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான்
படர்சடைமேற் பான்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச்
சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினா ரோங்கினா
ரெனவுரைக்கு முலகமே.
2.041. 5
கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார்.
1911 சாந்தாக நீறணிந்தான்
சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாக மெரிகொளுவச்
செற்றுகந்தான் றிருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி
யொளிதிகழு மலைமகடோள்
தோய்ந்தாகம் பாகமா
வுடையானும் விடையானே.
2.041.6
சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன்.
1912 மங்குல்தோய் மணிமாட
மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாங் கரைபொருது
திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின்
னிசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலா னடியார்க்குச்
சுவர்க்கங்கள் பொருளலவே.
2.041. 7
மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா.
1913 தொடலரிய தொருகணையாற்
புரமூன்று மெரியுண்ணப்
படவரவத் தெழிலாரம்
பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையாற் றடவரைத்தோ
ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா வடைவோமென்
றெண்ணுவார்க் கிடரிலையே.
2.041. 8
தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக் கருதி அடைவோர்க்கு இடர் இல்லை.
1914 வையநீ ரேற்றானு
மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு
மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச்
சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார்
தௌவுடைமை தேறோமே.
2.041. 9
இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர் பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.
1915 குறங்காட்டு நால்விரலிற்
கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணருஞ்
சாக்கியரு மலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே
தௌவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டி லாடலான்
பூம்புகார்ச் சாய்க்காடே.
2.041. 10
தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக் கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச்ர்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.
1916 நொம்பைந்து புடைத்தொல்கு
நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலு
மரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் றமிழ்பகர்ந்த
சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி
யேத்துவார்க் கிடர்கெடுமே.
2.041. 11
பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற் சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக் கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்து வார்க்கு இடர்கள் கெடும்.
திருச்சிற்றம்பலம்
2.041.திருச்சாய்க்காடு |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|