|
||||||||
இரண்டாம் திருமுறை-42 |
||||||||
2.042.திருஆக்கூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர்.
தேவியார் - கட்கநேத்திரவம்மை.
1917 அக்கிருந்த வாரமும்
ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான்
தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில்
பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042.1
என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேர அணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமை யான கோயில், பொய்யில்லாத மெய்ந் நெறியாகிய சைவ சமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.
1918 நீரார வார்சடையான்
நீறுடையா னேறுடையான்
காரார்பூங் கொன்றையினான்
காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக்
கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல் காக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 2
கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்ட வனும், கார் காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும்.
1919 வாளார்கண் செந்துவர்வாய்
மாமலையான் றன்மடந்தை
தோளாகம் பாகமாப்
புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள்
வள்ளன்மையான் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 3
ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியை தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.
1920 கொங்குசேர் தண்கொன்றை
மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர்
வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கமா றோடும்
அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 4
தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும்.
1921 வீக்கினா னாடரவம்
வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்கள்
ஆதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில்
ஆம்பலம்பூம் பொய்கைபுடை
தாக்கினார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 5
ஆடுகின்ற பாம்பைக் கச்சாக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம் ஆகும்.
1922 பண்ணொளிசேர் நான்மறையான்
பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான்
காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந்
தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 6
பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
1923 வீங்கினார் மும்மதிலும்
வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள்
வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ
டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 7
பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும்.
1924 கன்னெடிய குன்றெடுத்தான்
தோளடரக் காலூன்றி
இன்னருளா லாட்கொண்ட
வெம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும்
பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 8
கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணை காட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமடம் ஆகும்.
1925 நன்மையா னாரணனும்
நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே
டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க்
கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 9
நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லை யென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
1926 நாமருவு புன்மை
நவிற்றச் சமண்டேரர்
பூமருவு கொன்றையினான்
புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச்
செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு மாக்கூரிற்
றான்றோன்றி மாடமே.
2.042. 10
சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடைனினாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
1927 ஆட லமர்ந்தானை
யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை
மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர்
ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க்
கில்லையாம் பாவமே.
2.042. 11
திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாட வீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
2.042.திருஆக்கூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|