|
||||||||
இரண்டாம் திருமுறை-45 |
||||||||
2.045.திருக்கைச்சினம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைச்சினநாதர்.
தேவியார் - வேள்வளையம்மை.
1950 தையலோர் கூறுடையான்
தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான்
மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவேல்
ஏந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 1
மாதொருபாகனும், குளிர்ந்த பிறைமதி சூடிய செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும், வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய் பூசப் பெற்ற மூவிலை வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும்.
1951 விடமல்கு கண்டத்தான்
வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான்
பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கு மாடலினான்
நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான்
உறைகோயில் கைச்சினமே.
2.045. 2
விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும், மதயானையை உரித்த தோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் கைச்சினம்.
1952 பாடலார் நான்மறையான்
பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியந்
துன்று கரந்தையொடும்
ஆடலா னங்கை
யனலேந்தி யாடரவக்
காடலான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 3
பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும், பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி, செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில் அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1953 பண்டமரர் கூடிக்
கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரா னென்றிறைஞ்சி
யும்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகர
மூன்றுடனே வெந்தவியக்
கண்டபிரான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 4
முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப், பகைவருடைய பழமையான முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவி உறையும் கோவில் கைச்சினம்.
1954 தேய்ந்துமலி வெண்பிறையான்
செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான்
மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத்
தடங்கடனஞ்சுண்டநங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 5
தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும், சிவந்த திருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும், மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப் பெரியகடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1955 மங்கையோர் கூறுடையான்
மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையா
னாடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த
சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 6
மாதொரு கூறனும், நிலையான வேதங்களை ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில் திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1956 வரியரவே நாணாக
மால்வரையே வில்லாக
எரிகணையான் முப்புரங்க
ளெய்துகந்த வெம்பெருமான்
பொரிசுடலை யீமப்
புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 7
வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற் பொறியைத் தூவும் சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1957 போதுலவு கொன்றை
புனைந்தான் றிருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச
மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த
நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 8
உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதி அவனை முன்போல விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும், இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்பமுடையவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறை கோயில் கைச்சினம்.
1958 மண்ணினைமுன் சென்றிரந்த
மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ண
மெரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப்
படுவான்றன் னெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை
கோயில் கைச்சினமே.
2.045. 9
மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும், தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1959 தண்வயல்சூழ் காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை
கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப்
பயின்ற விவைவல்லார்
விண்ணவரா யோங்கி
வியனுலகம் ஆள்வாரே.
2.045. 11
குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன் மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓத வல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற அவ்வுலகை ஆட்சிபுரிவர்.
திருச்சிற்றம்பலம்
2.045.திருக்கைச்சினம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|