|
||||||||
இரண்டாம் திருமுறை-46 |
||||||||
2.046.திருநாலூர்த்திருமயானம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பலாசவனேசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1960 பாலூரு மலைப்பாம்பும்
பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான்
வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து
நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால்
வந்தூரா மறுபிறப்பே.
2.046. 1
பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப் பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது.
1961 சூடும் பிறைச்சென்னிச்
சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங்
கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா
நாலூர் மயானத்தைப்
பாடுஞ் சிறப்போர்பாற்
பற்றாவாம் பாவமே.
2.046. 2
பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா.
1962 கல்லா னிழன்மேவிக்
காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா வறனுரையும்
இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும்
நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாஞ்
செல்லாதார் தொன்னெறிக்கே.
2.046.3
கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர்.
1963 கோலத்தார் கொன்றையான்
கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான்
நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும்
நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பாற்
சூழாவாந் தொல்வினையே.
2.046. 4
அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர் மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா.
1964 கறையார் மணிமிடற்றான்
காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான்
பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ்
நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க்
கெய்துமா மின்பமே.
2.046. 5
விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும்.
1965 கண்ணார் நுதலான்
கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி
ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான்
நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம்
நண்ணாதார் நன்னெறியே.
2.046. 6
கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார்.
1966 கண்பாவு வேகத்தாற்
காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான்
நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள்
நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க்
கேலா விடர்தானே.
2.046. 7
நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத் தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறை வதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா.
1967 பத்துத் தலையோனைப்
பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து
வாளோடு நாள்கொடுத்தான்
நத்தி னொலியோவா
நாலூர் மயானத்தென்
அத்த னடிநினைவார்க்
கல்ல லடையாவே.
2.046. 8
பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா.
1968 மாலோடு நான்முகனும்
நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா
மேன்மையான் வேதங்கள்
நாலோடு மாறங்கம்
நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி
பாதம் பணிவோமே.
2.046. 9
திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம்.
1969 துன்பாய மாசார்
துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே
புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா
நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை
யேத்துவார்க் கின்பமே.
2.046. 10
துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு ‘சிவாய’ என்னும் மந்திரத்தைக் கூறிக்கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்பவடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும்.
1970 ஞாலம் புகழ்காழி
ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோதும்
நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற்
சிறந்தேத்த வல்லாருக்
கேலும் புகழ்வானத்
தின்பா யிருப்பாரே.
2.046. 11
உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞான சம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும்.
திருச்சிற்றம்பலம்
2.046.திருநாலூர்த்திருமயானம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|