|
||||||||||||||||||
அமெரிக்க ஆரம்பக்கல்வி - 5 |
||||||||||||||||||
"கல்வி " என்பது சமூகத்தின் ஒரு சாராரின் உரிமை, மற்றவர்கள் அவர்களுக்கு சேவை செய்யும் தொழிலை கற்றாலே போதும் என்ற ஏற்றத்தாழ்வு நிலை மாறி, இன்று இந்தியாவின் கடை கோடி கிராமத்தானும் தன் குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பெற்று வருவது மிகவும் வரவேர்க்கதக்கதாகும். இன்றைய மாறிவரும் சூழலுக்கேற்ப கல்வியும் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டே வருகிறது. உலகமயமான இன்றைய போட்டியில் நாம் நம்மைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. சீனா மற்றும் அமெரிக்காவில் குழந்தைகளை எப்படி தயார்செய்கிரார்கள்? என்பதை அறிந்து ,ஆராய்ந்து நல்ல விஷயங்களை, நம் கல்வி முறையில் உட்படுத்தினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கில் அமெரிக்க பள்ளிக் கல்வி முறை குறித்தும், அவற்றில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் சற்று விரிவாகக் காண்போம்.
கிராமத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழி யில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்று, இன்றைய தகவல் தொழில்நுட்ப போட்டியில் பங்கேற்று வருவதாலும், கிராம மற்றும் நகர்ப்புற மாணவர்களிடம் உள்ள கல்வித்தர வேறுபட்டால், கிராமப்புற மாணவர்கள் வேளையில் சேர சந்திக்கும் சவால்களை நானும் சந்தித்ததனால், இன்றைய நம் கல்வியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து ஓரளவு அறிவேன்.
தற்சமயம் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இந்திய இளைநர்களின் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அமெரிக்கா ,சீனா மற்றும் இந்திய கல்வி முறையை ஒப்பிட்டு, அமெரிக்க மாணவர்கள், இந்திய மற்றும் சீன மாணவர்களை விட இரண்டு ஆண்டுகள் பின்தங்கி உள்ளதாக தெரிவிக்கும் சில டாக்குமென்டரி படங்கள் வெளியாகி அவை அமெரிக்காவில் கல்வியாளர்களிடையே விரிவாக விவாதிக்கப்பட்டுவருகிறது. மேலும் சமீபத்தில் ஜார்ஜ் புஷ், பென்சிர்வேனியா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளுடன் உரையாற்றும் போது, 'நீங்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' ,இல்லையேல் இந்திய மாணவர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் போகும் என்று பேசினார். இன்று இந்திய இளைஞர்கள் உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திப்பிடித்துள்ளார்கள் என்று பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் நூற்றுக்கு 27.18 சதவீதம் பேர்தான் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள்,மீதமுள்ள 72.82 சதவீதம் பேர் படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவின் தொழில் வளர்ச்சி பெற்ற தமிழகத்திலேயே இந்த நிலை என்றால், மற்ற பல மாநிலங்களின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பெற்றோர்களின் அறியாமையாகக் கருதி விட்டுவிட முடியாது. இன்றைய கல்வித் திணிப்பும், நம் கல்விமுறையும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இல்லை என்பதும், மாணவர்களைக் கவரும் விதத்தில் நம் ஆசிரியர்களின் அணுகுமுறை இல்லை என்பதுமே காரணமாக இருக்கமுடியும். இன்றைய நம் கல்விமுறை மாணவர்களின் ஆர்வத்தை, படைப்புத்திறனை ,தலைமைப்பண்பை ,வாழ்வியல் நெறிமுறைகளை, சமுதாய ஈடுபாட்டை கற்பிப்பதற்கு பதிலாக, மாணவர்களை வேலை பார்பதற்கு உகந்த தொழிலாளர்களாக உருவாக்குவதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில் 99 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள், இருப்பினும் இங்கு குழந்தைகளை ஆறு ஆண்டு கழித்தே பள்ளியில் சேர்க்கிறார்கள்.மேலும் குழந்தை நல மருத்துவர்கள் பெற்றோர்களை தங்கள் தாய் மொழியிலேயே குழந்தையுடன் பேச அறிவுறுத்துகிறார்கள் . குழந்தைகள் வீட்டில் இருப்பதை விட பள்ளிக்கு போகவே அதிகம் விரும்புகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்கூட பள்ளிக்குப் போகவேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளை பார்த்திருக்கிறேன். இதற்க்குக் காரணம், பள்ளிகள் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் அதிகரிக்கும் விதத்தில் விளையாட்டாக, அதிக கட்டுப்பாடு இல்லாத, படைப்புத்திறன் மிக்க வகையில் கல்வியை போதிக்கிறார்கள். மேலும் கல்வித்திட்டம் மாநிலங்களால் வரையறுக்கப்பட்டு, கவுண்டி (county ) எனப்படும் மாவட்டங்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து வரும் பெரும்பகுதி வருமானம் அம்மாவட்ட கல்விக்காகச் செலவிடப்படுகிறது.உதாரணமாக நான் இருக்கும் வெர்ஜினியா மாநிலத்தில் மாவட்டத்தின் 52.3 சதவீத வருமானம் கல்விக்காக செலவிடப்படுகிறது.மக்களின் வரிப்பணத்தில் பெரும்பாலான வரிப்பணம் அவர்களின் அருகாமையில் உள்ள பள்ளிக்கு செலவிடுவதாலும், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அவர்களின் வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது என்ற விவரங்களை மக்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் தெரியப்படுத்துவதாலும், அரசுக் பள்ளிகள் (public school )அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதாலும்,குறிப்பாக அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்ப விடுவதற்கு பள்ளிப் பேருந்துகள் அரசுப் பள்ளியால் இயக்கப்படுவதாலும் அனைவரும் அரசுப்பள்ளிகளையே விரும்புகிறார்கள். அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாகவும்,இலவசமாகவும் கிடைப்பது பெற்றோர்களைக் கவர மற்றொரு காரணமாகும். இங்கு குறைந்த அளவு (சுமார் 15 சதவீதம்) மக்களே தனியார் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்புகிறார்கள். இங்கு தனியார் பள்ளிகள் அருகிலுள்ள கிறஸ்தவ தேவாலயங்களாலும், மத அமைப்புகளாலும் நடத்தப்படுவதால் அவை மத சிந்தனை சார்ந்த(பைபிள் வகுப்புகள்) விசயங்களையும் சேர்த்தே போதிக்கிறது. தனியார் கல்வி மிகவும் செலவு மிக்கதாக இருக்கிறது. இங்கு அரசுப் பள்ளிகளில் சீருடை கிடையாது ஆனால் தனியார் பள்ளிகளில் சீருடை முறை கடைபிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கல்வித்துறை மற்றும் உயர்பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்கிறார்கள், இது இங்குள்ள கல்வித்தரத்தின் மேல் பெற்றோர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. நம்மூரில் "இந்தியை ஒழிப்போம், ஆங்கிலத்தை அழிப்போம்" என்று மேடையில் முழங்கிவிட்டு அடுத்தநாள் தன்னுடைய குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில், இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியாகவும் தேர்ந்தெடுத்துச் சேர்க்கும் தலைவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டுள்ளார்கள்.
-தொடரும்
-ச.பார்த்தசாரதி
|
||||||||||||||||||
by Swathi on 21 Jan 2012 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|