|
||||||||
மூன்றாம் திருமுறை-26 |
||||||||
3.026.திருக்கானப்பேர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர் - காளையீசுவரர்.
தேவியார் - மகமாயியம்மை.
3074 பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ வடியரே 3.026.1
பெண் யானைகள் பின்தொடர, பெரிய தும்பிக்கையுடைய ஆண்யானையானது, விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி, மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை யன்றி, அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது?
3075 நுண்ணிடைப் பேரல்குல் நூபுர மெல்லடிப்
பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே 3.026.2
நுண்ணிய இடையையும், பெரிய அல்குலையும், சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, விண்ணுலகை ஆளும் விருப்பமுடையவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும்.
3076 வாவியாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளு ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே 3.026.3
பகலில் குளத்திலுள்ள தாமரை மலர்களில் தங்கித்தேனைப் பருகிய வண்டினம், இரவில் அப்போது மலரும் நீலோற்பல மலரை அடைந்து தேனுண்ட மகிழ்ச்சியில் பண்ணிசைக்க விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை, கஸ்தூரி என்னும் மான், புழுகுப்பூனை இவற்றிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள், சந்தனம், புனித நீர் முதலியன கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி, மலர்தூவி அர்ச்சித்துப் போற்றி வழிபடுபவர்.
3077 நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலாற் களைகிலார் குற்றமே 3.026.4
திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானை, மனத்தை பொறிவழிஓடாது ஒருமுகப்படுத்தி நிறுத்திய நெஞ்சுடன், பூவும் நீரும் கொண்டு, முழவு முழங்க, இறைவனின் புகழைப்பாடி நைவேத்தியம் செய்து வழிபடுகின்ற மெய்யடியார்களுக்கு அல்லாது ஏனையோர்களுக்குக் குறைகள் தீருமோ!
3078 ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
ஞானப்பே ராயிரம் பேரினா னண்ணிய
கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே 3.026.5
பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல், எலும்புமாலையும் அணிந்து, அழிவில்லாத சிவஞானம் தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித் தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர் ஆவர். தேவர்களின் நகரமான அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர்.
3079 பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே 3.026.6
பள்ளம் போன்ற படர்ந்த சடையில், வெள்ளம் போலப் பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும் சூடினான் சிவபெருமான். கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற, திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள மெய்யடியார்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என் மனம் வழிபடும்.
3080 மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே 3.026.7
பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனை, குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம், வாக்கு, காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும்.
3081 வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே 3.026.8
வாட்போர் வலியாலும், வேற்படைப் பயிற்சியாலும், பெரிய கயிலைமலையை எடுத்த வலிமை வாய்ந்த தோள்களை உடைய இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு, பெருவிரலை ஊன்றிய திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள்.
3082 சிலையினான் முப்புரந் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமைகண்டு ஓங்கினான்
கலையினார் புறவிற்றேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே 3.026.9
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தைத் தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான், நிலையிலா பிரமன், திருமால் இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான். அழகிய குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த நிலமான, தேன் மணம் கமழத் திகழும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர்.
3083 உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே 3.026.10
உறியினிடத்துச் சுரைக்குடுக்கை, கமண்டலம் இவற்றைத் தாங்கிக் கையில் பிடித்து அலையும், இறைவனை உணராத பாவிகளாகிய சமணர், புத்தர்கள் முறையே செய்யும் தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும், காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை. மடமையுடைய பெண்யானையும் வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழுவது நம் கடமையாகும்.
3084 காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத் திளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத் திவைவலார்க்கு இல்லையாம் பாவமே 3.026.11
சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, இளவரால் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய வளமையான சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை. (அவர்கள் பாவத்திற்குக் காரணமான தீவினைகளைலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.)
திருச்சிற்றம்பலம்
3.026.திருக்கானப்பேர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|