|
||||||||
இரண்டாம் திருமுறை-49 |
||||||||
2.049.சீகாழி
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1993 பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாடொறுங்
கண்ணி னேரயலே
பொலியுங் கடற்காழிப்
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு
மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார்
அருளாலுங் குறைவிலரே.
2.049. 1
பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர் பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே எம்தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு அருளாலும் குறைவிலர்.
1994 மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்க வங்கமுங்
கண்டலம் புடைசூழ்
வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்ட லங்கௌதாம்
அதுநல் விதியாமே.
2.049. 2
நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள் மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள் சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில் வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே நல்லூழையும் தருவதாகும்.
1995 நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர்
தேன்துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யானென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர்கள்
வினை நீங்கலுற்றாரே.
2.049. 3
நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள் நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள் தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர், வளைந்த சங்கவெண்குழைக் காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும் சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர்.
1996 மையி னார்பொழில் சூழ நீழலில்
வாச மார்மது மல்க நாடொறும்
கையி னார்மலர்
கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில்
உயர்ந்தாரி னுள்ளாரே.
2.049. 4
கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும் தேன் ஒழுகி நிறைவதும், அடியவர் கைகள் நிரம்ப மலர் பறித்துக் கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து ஐயனே ‘அரனே’ என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில் உயர்ந்தாரில் உள்ளவராவர்.
1997 மலிக டுந்திரை மேனி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்திலம் விழக்
கலிக டிந்தகையார்
மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினைநோய்
அவைமேவுவார் வீடே.
2.049. 5
நிறைந்து விரைந்து வரும் வரும் அலைகளில் எதிர் வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள் பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில் வலிய காலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும்.
1998 மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தையராய்க்
கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடு வார்வினை
செற்றமாந் தரெனத்
தௌமின்கள் சிந்தையுளே.
2.049. 6
இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும் வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும் காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து இசைபாடுவோர் வினைகளைக் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச் சிந்தையில் தௌவீர்களாக.
1999 தான லம்புரை வேதிய ரொடு
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கானலின் விரைசேர
விம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பார்
அருள்வேந்த ராவாரே.
2.049.7
நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து விம்மும் காழிப் பதியுள் ஊனுடம்புடையோர் உயிர் வாழ்தற்குப் பயனாய் அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்ததினால் நலம் கொடுக்கும் பெருமான் விளங்குகின்றான். அவனைத் தொழுவோர் அருள் வேந்தர் ஆவர்.
2000 மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்
றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்தராய்ப் பரவும்
பயனீங்கு நல்காயே.
2.049. 8
வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும் ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப் பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக.
2001 பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும்
வயல்சூழ் கலிக்காழித்
திருவி னாயக னாய மாலொடு
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா
னெனவேத்துத லின்பமே.
2.049. 9
பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள் உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும் சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும் காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும்.
2002 பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலார்
அழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடு கூடிய
வேட னேசுட லைப்பொ டியணி
அண்டவா ணனென்பார்க்
கடையா வல்லல்தானே.
2.049. 10
சோற்றுத் திரளை உண்டு திரிபவர்களும், சற்றும் நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். “அழகிய பெருமிதத்துடன் விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக் கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே” என்பாரை அல்லல்கள் அடையா.
2003 பெயரெ னும்மிவை பன்னி ரண்டினு
முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வயல்சூழ்ந்
தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்த மிழுரை
உயருமா மொழிவார்
உலகத் துயர்ந்தாரே.
2.049. 11
பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ் பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.049.சீகாழி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|