|
||||||||
மூன்றாம் திருமுறை-121 |
||||||||
3.121.திருப்பந்தணநல்லூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
4101 இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை
யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர்
காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்
கோவணங் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.1
திருப்பந்தணைநல்லூர் என்ற திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியாராகிய சிவபெருமான் காலனை உதைத்து அழித்தவர், அசுரர்களின் முப்புரங்கள் பொடியாகும்படி எரித்தவர், என்பன போன்ற புகழ்மொழிகளாகிய இவற்றைச் சொல்லி உலகத்தவர் மிகவும் துதிக்கும்படியாகக் காட்டில் உள்ளவராவர். காற்றில் எங்கும் கலந்துள்ளார். உறுதிப்பாடுடையவர். எதனாலும் குறைவில்லாதவர். கோவணம் தரித்துக் கூத்தாடும் வஞ்சகரும் ஆவார்.
4102 கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங்
காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவு மலையுளா ரெனவு
மண்ணுளார் விண்ணுளா ரெனவும்
சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார்
தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.2
இறைவன் கடற்கழியில் உள்ளார். கடலிலே உள்ளார், காடுகளில் உள்ளார். நாடுகளில் உள்ளார். விண்ணுலகத் திலே உள்ளார். நீர்ச்சுழிகளில் உள்ளார். இவ்வாறு அவர் எல்லா இடத்திலும் இருப்பவர் என்று சொல்லப் பெற்றாலும், அவ்வாறு இருக்கும் அடையாளம் பிறர் எவராலும் அறியப்படாத தன்மையர் ஆவார். இவ்வாறு தொண்டர்களின் போற்றுதலுக்கும், வணக்கத்திற்குமுரிய சிவபெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
4103 காட்டினா ரெனவு நாட்டினா ரெனவுங்
கடுந்தொழிற் காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்த வெண்ணீறு
பூசியோர் வெண்மதி சடைமேல்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார்
சொல்லுள சொல்லுநால் வேதப்
பாட்டினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.3
இறைவர் காட்டில் வசிப்பவர். நாட்டில் உள்ளவர். கொடுந்தொழில் செய்யும் இயமனைக் காலால் உதைத்தவர். நறுமணம் கமழும் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சடைமேல் அணிந்துள்ளவர். இவ்வாறு எத்தனை புகழ்ச்சொற்கள் உண்டோ அத்தனையும் சொல்லப் பெற்ற நால் வேதங்களாகிய பாட்டின் பொருளானவர். அப்படித் தாம் எல்லாமாய் இருக்கின்ற அடையாளம் பிறரால் அறியப்படாத தன்மையர்.
4104 முருகினார் பொழில்சூ ழுலகினா ரேத்த
மொய்த்தபல் கணங்களின் துயர்கண்
டுருகினா ராகி யுறுதிபோந் துள்ள
மொண்மையா லொளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக்
கடலுணஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.4
இறைவன் அழகிய சோலைகள் சூழ்ந்த உலகத்தார் போற்றி வணங்க, நெருங்கிய பலவகைக் கணங்களின் துயரினைக் கண்டு உருகி, உள்ள உறுதியோடு, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற தங்கள் உடல்கள் கருநிறம் அடையப் பெற்றாராகிய திருமால் முதலிய தேவர்களெல்லாம் கைதொழுது வணங்க, அவரது துன்பத்தினைப் போக்கக் கடலுள் எழுந்த நஞ்சினை அமுதம்போல் வாங்கிப் பருகினவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
4105 பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து
பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினா ருருவின் மிளிர்வதோ ரரவ
மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித்
தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.5
இறைவர் பொன்போன்ற பெரிய கொன்றை மாலையை வண்டுகள் கிளர்ந்து ஒலிக்கும்படி மார்பில் அணிந்துள்ளவர். அத்துடன் முப்புரி நூலும் அணிந்துள்ளவர். மின்னல் போன்று ஒளியுடைய பாம்பை அணிந்துள்ளவர். திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். தம்மை வந்தடைந்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறப்பொருள் உபதேசித்தவர். தொன்மைக்கோலம் உடையவர். மாறி மாறி உலகைப் படைத்தலும், அழித்தலும் செய்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
4106 ஒண்பொனா ரனைய வண்ணல்வாழ் கெனவு
முமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியா ரல்லுநன் பகலு
மடியவ ரடியிணை தொழவே
நண்பினா ரெல்லா நல்லரென் றேத்த
அல்லவர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.6
அன்பர்கள் இறைவனை, ‘ஒளிமிக்க பொன் போன்ற தலைவரே வாழ்க’ எனவும், ‘உமையவள் கணவனே வாழ்க’ எனவும் போற்றுவர். அவரை நெருங்கி அணுகப்பெற்று, இரவும், பகலும் பிரியாராகித் திருவடிகளைத் தொழுவர். பத்தர்களெல்லாரும் அவர் நன்மையைச் செய்பவர் என்று போற்ற, மற்றவர்கள் தீமையைச் செய்பவர் என்று சொல்லும் தன்மையினையுடையவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவர்.
4107 எற்றினா ரேது மிடைகொள்வா ரில்லை
யிருநிலம் வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச்
செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழு மும்மதில் வேவ
மூவிலைச் சூலமு மழுவும்
பற்றினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.7
தமக்கு எத்தகைய துன்பமும் செய்யாத தேவர்களையும், மண்ணுலக மாந்தர்களையும் துன்புறுத்தி, மோதி அழித்தலைச் செய்த பகைவர்கள் காரணமாகப் போர் செய்து, தம் திருவடிகளைச் சேரும் பொருட்டுத் தவம் முற்றினார்களாகிய மூவர்கள் வாழ்கின்ற முப்புரங்களும், (அம்மூவர் தவிர) வேகும்படி செய்து மூவிலைச் சூலமும், மழுவாயுதமும் ஏந்தியவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் ஆவார்.
4108 ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப
வோசையா லாடல றாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே
காலினாற் பாய்தலு மரக்கன்
வலிகொள்வர் புலியி னுரிகொள்வ ரேனை
வாழ்வுநன் றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.8
குழலும், முழவும் ஒலிக்க அவற்றின் ஓசையோடு ஆடலும் நீங்காத மகிழ்ச்சியுடைய திருக்கயிலாய மலையைப் பெயர்க்க இராவணன் அதன் கீழ்க் கையைச் செலுத்த, அது கண்டு இறைவன் தம் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமையை அழியுமாறு செய்தார். அவர் புலியின் தோலை ஆடையாக உடுத்தவர். நல்ல வாழ்வு உடையவர் எனினும் பிரம கபாலத்தைக் கையிலேந்திப் பிச்சை ஏற்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
4109 சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ்
செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார்
துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச்
சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே
3.121.9
சேறு நிறைந்த பொய்கையில் மலரும் தாமரைமேல் வீற்றிருக்கும் பிரமனும், சிவந்த கண்களையுடைய திருமாலும் முறையே அன்ன உருவெடுத்து மேல்நோக்கி வானிலும், பன்றி உருவெடுத்துக் கீழ்நோக்கிப் பாதாளத்திலும் இறைவனின் முடியையும், அடியையும் தேடிச்செல்ல, அறியாது தோற்றனர். இறைவனின் தொன்மைத் தோற்றத்தை அறியாது துணையையும், பெருமையையும் தமக்குள் பேசித் தாமே பரம் எனப் பேசினர். பின் இறைவனிடம் யாம் வலியில்லோம் என்று முறையிட்டுத் தம் பிழையை மன்னிக்க வேண்ட, அவர் அவர்கட்குச் சரண் கொடுத்து அவர்களது பாவத்தை மாற்றியருளினார். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
4110 கல்லிசை பூணக் கலையொலி யோவாக்
கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி
மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்
தொல்வினை சூழகி லாவே
3.121.11
கற்கும் ஓசைகள் நிறைந்து கலைகளின் ஒலி நீங்காத திருக்கழுமலம் என்னும் பழமையான நகரில் அவதரித்த நல்ல பெருமையினையுடையவனும், அற்பர்களான புறச்சமயிகளின் மொழியைக் கேளாதவனுமாகிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பற்களுடன் கூடிய பிளந்த வாயினையுடைய மண்டை ஓட்டை ஏந்தியவனான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தைப் போற்றி அருளிய பாடல்கள் பத்தினையும் ஓதவல்லவர்களைத் தொல்வினை வந்து சூழாது .
திருச்சிற்றம்பலம்
3.121.திருப்பந்தணநல்லூர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|