|
||||||||
இரண்டாம் திருமுறை-51 |
||||||||
2.051.திருக்களர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - களர்முளையீசுவரர்.
தேவியார் - அழகேசுவரியம்மை.
2015 நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில்
நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில்
விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும்
ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே
அடைந்தார்க் கருளாயே.
2.051. 1
நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பானே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.
2016 தோளின் மேலொளி நீறு தாங்கிய
தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந்
தவமல்கு திருக்களருள்
வேளி னேர்விச யற்க ருள்புரி
வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே
அடைந்தார்க் கருளாயே.
2.051. 2
தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடிபோற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.
2017 பாட வல்லநன் மைந்த ரோடு
பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ்
செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி
நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே
அடைந்தார்க் கருளாயே
2.051. 3
பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாட வீடுகளைக்கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.
2018 அம்பி னேர்தடங் கண்ணி னாருடன்
ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொ னார் பொழில்
சூழ்ந்தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா
விணையடி போற்றி நின்றவர்க்
கன்பு செய்தவனே
அடைந்தார்க் கருளாயே.
2.051. 4
வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாட மாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.
2019 கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங்
கெண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்கு பைங்கமுகம்
புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண
வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
தங்கை யிற்படையாய்
அடைந்தார்க் கருளாயே.
2.051. 5
தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மது உண்டு இசை பாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.
2020 கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்
சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார்
புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்ட னேநிமிர்
புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆல நீழலுளார்
அடைந்தார்க் கருளாயே.
2.051. 6
அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2021 தம்ப லம்மறி யாத வர்மதில்
தாங்கு மால்வரை யாலழ லெழத்
திண்பலங் கெடுத்தாய்
திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி
வானவர் தொழக் கூத்து கந்துபேர்
அம்பலத் துறைவாய்
அடைந்தார்க் கருளாயே.
2.051. 7
தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத் தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப்பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2022 குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி
மாட நீடுயர் கோபு ரங்கண் மேல்
சென்ற டுத்துயர்வான்
மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய்
அடைந்தார்க் கருளாயே.
2.051. 8
மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள்,நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள் வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2023 பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணி லாமதியம்
பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு
வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ண லாயவெம்மான்
அடைந்தார்க் கருளாயே.
2.051. 9
யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தௌந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி,திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.
2024 பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார்
சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண்
தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே
யடைந்தார்க் கருளாயே.
2.051. 10
நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பினரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்கு பவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2025 இந்து வந்தெழு மாட வீதியெ
ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்து நேர்மொழியார்
அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை
அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன் சொல்லிவை
பத்தும்பாடத் தவமாமே.
2.051. 11
திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத் தவம் சித்திக்கும்.
திருச்சிற்றம்பலம்
2.051.திருக்களர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|