|
||||||||
இரண்டாம் திருமுறை-52 |
||||||||
2.052.திருக்கோட்டாறு
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
2026 கருந்த டங்கண்ணின் மாத ராரிசை
செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின்
விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி
இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார்
நெறிசேர்வர் வானூடே.
2.052. 1
கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண்வழியாக வீட்டுநெறியை எய்துவர்.
2027 நின்று மேய்ந்து நினைந்து மாகரி
நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றி னேர்ந்துகுத்திப்
பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பி ரான்கழல்
ஏத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார்
புகழார்ந்த புண்ணியரே.
2.052.2
பெரிய யானை நின்று மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக் குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர் அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார்.
2028 விரவி நாளும் விழா விடைப்பொலி
தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரு
நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின்
றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவு மாறுவல்
லார்பழிபற் றறுப்பாரே.
2.052. 3
நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர்.
2029 அம்பி னேர்விழி மங்கை மார்பலர்
ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி
லின்கொடியாடு கோட்டாற்றில்
நம் பனேநட னேந லந்திகழ்
நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பி னேர்ந்தறி
யார்தடுமாற் றவல்வினையே.
2.052. 4
அம்புபோன்ற விழியை உடைய மங்கையர் ஆடுமிடமாகக்கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார்.
2030 பழைய தம்மடி யார்து திசெயப்
பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலு மொந்தை
விழாவொலி செய்யுங்கோட்டாற்றில்
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக்
கானி டைக்கண மேத்த வாடிய
அழக னென்றெழுவார்
அணியாவர் வானவர்க்கே.
2.052. 5
பழமையான தம் அடியவர் துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும் ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர்.
2031 பஞ்சின் மெல்லடி மாத ராடவர்
பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி யின்மொழியால்
தொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேம ணிமிடற்
றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார்
பிறவாரித் தொன்னிலத்தே.
2.052. 6
பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே ! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர்.
2032 கலவ மாமயி லாளொர் பங்கனைக்
கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார்
குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதி சேர்ச டையுடை
நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின்
உயர்வாகுவ துண்மையதே.
2.052.7
தோகையை உடைய மயில் போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம் சொல்லுவார் குடி கொண்டுள்ள கோட்டாற்றில், நில வொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை.
2033 வண்ட லார்வயற் சாலி யாலைவ
ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந்
தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்து திசெய்ய நின்ற
தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த்
தென்னுகந்திட்ட வெற்றிமையே.
2.052. 8
வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும் கரும்பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப் பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ?
2034 கருதி வந்தடி யார்தொ ழுதெழக்
கண்ண னோடயன் றேடவானையின்
குருதி மெய்கலப்ப
உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாது நீயும்வி
யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள்
எருதுகந் தவனே
யிரங்காயுன தின்னருளே.
2.052. 9
அடியவர் கருதி வந்து தொழுது எழவும், கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக.
2035 உடையி லாதுழல் கின்ற குண்டரும்
ஊண ருந்தவத் தாய சாக்கியர்
கொடையி லாமனத்தார்
குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய
பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகி லாதவண்ணம்
அருளாயுன் னடியவர்க்கே.
2.052. 10
உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண் அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக.
2036 கால னைக்கழ லாலு தைத்தொரு
காம னைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள்
குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன்றி லாதவெம்
முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும்வல்லார்க்
கௌதாகும் வானகமே.
2.052. 11
காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும், காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும்.
திருச்சிற்றம்பலம்
2.052.திருக்கோட்டாறு |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|