|
||||||||
இரண்டாம் திருமுறை-53 |
||||||||
2.053.திருப்புறவார்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர்.
தேவியார் - திருப்புருவமின்னாளம்மை.
2037 விண்ண மர்ந்தன மும்ம தில்களை
வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர்
புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே
கலந்தார்க் கருளாயே.
2.053. 1
வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார் பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.
2038 நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும்
புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே
அடைந்தார்க் கருளாயே.
2.053. 2
நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசை பாடும்புறவார் பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2039 வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை
வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம்
புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந்
தவத்தார்க் கருளாயே.
2.053. 3
வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2040 மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி
மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப்
புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந்
தவத்தார்க் கருளாயே.
2.053.4
வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென் கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்று குளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடி பரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக.
2041 செங்க யல்லொடு சேல்செ ருச்செயச்
சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும்
புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்
கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே
அடியார்க் கருளாயே.
2.053. 5
செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக.
2042 நீரி னார்வரை கோலி மால்கடல்
நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப்
புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந்
திறத்தார்க் கருளாயே.
2.053. 6
பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள்தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள்தோறும் சிறப்போடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக.
2043 கைய ரிவையர் மெல்வி ரல்லவை
காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும்
புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையொர் பாக மாகவும்
மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா வடிமை
புரிந்தார்க் கருளாயே.
2.053. 7
மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப் படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார் பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக.
2044 தூவி யஞ்சிறை மெல்ந டையன
மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும்
புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன
தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான்
என்பவர்க் கருளாயே.
2.053. 8
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக.
2045 அந்தண் மாதவி புன்னை நல்ல
அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள்
சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே
தவத்தார்க் கருளாயே.
2.053. 9
அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக.
2046 நீண மார்முரு குண்டு வண்டினம்
நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும்
புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும்
நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே
உகப்பார்க் கருளாயே.
2.053. 10
வண்டுகள், பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரியவனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக.
2047 மையி னார்மணி போல்மி டற்றனை
மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ்
புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள்
ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார்
சிவலோகஞ் சேர்வாரே.
2.053. 11
கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார். பனங்காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
2.053.திருப்புறவார் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|