|
||||||||
இரண்டாம் திருமுறை-54 |
||||||||
2.054.திருப்புகலி
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2048 உருவார்ந்த மெல்லியலோர்
பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங்
காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண்
சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.
2.054.1
அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே! தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர் கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும்.
2049 நீரார்ந்த செஞ்சடையீர்
நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலிய
ருழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென்
றணையுங்கானற் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.
2.054.2
கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய் அமைந்த கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும் பலியை ஏற்பவரே! உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே! போர் போன்றுயர்ந்து வரும் அலைகள் சென்றணையும் கடற்சோலைகளைக் கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.
2050 அழிமல்கு பூம்புனலு
மரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர்
கறையார்கண்டத் தெண்டோளீர்
பொழின்மல்கு வண்டினங்க
ளறையுங்கானற் பூம்புகலி
எழின்மல்கு கோயிலே
கோயிலாக விருந்தீரே.
2.054.3
மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும் பாம்பும் சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே! கறைக்கண்டமும் எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள் எழில் விளங்கும் கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2051 கையிலார்ந்த வெண்மழுவொன்
றுடையீர்கடிய கரியின்றோல்
மயிலார்ந்த சாயன்மட
மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள்
பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே
கோயிலாக விசைந்தீரே.
2.054. 4
கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில் போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும் அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2052 நாவார்ந்த பாடலீர்
ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின்
பயன்களானீ ரயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும்
வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.
2.054.5
நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே! ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும் பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில் தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு திகழ்கின்றீர்.
2053 மண்ணார்ந்த மண்முழவந்
ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப்
பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை
மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.
2.054.6
மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு-வலந்தரை) மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்) ஒலிக்க-இமவான் மகளாகிய பார்வதி தேவி திருமேனியிற் பொருந்தி விளங்க, விரும்பிக் கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற் பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில் கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு கலந்துள்ளீர்.
2054 களிபுல்கு வல்லவுண
ரூர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர்
அமரரேத்த வருள்செய்தீர்
தௌபுலகு தேனினமு
மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே
கோயிலாக வுகந்தீரே.
2.054.7
களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள் எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடைய 120 வரே! தேவர்கள் வழிபட அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தௌந்த தேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம் கமழும் புகலியில் உள்ள ஒளி பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2055 பரந்தோங்கு பல்புகழ்சே
ரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட்
டுகவையளித்தீ ருகவாதார்
புரந்தோன்று மும்மதிலு
மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.054.8
பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்நாள் அருளியவரே! தம்மோடு மகிழ்வில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் எரியச் செய்தவரே! அழகிய புகலியில் அருள் நலம் தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2056 சலந்தாங்கு தாமரைமே
லயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங்
காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி யைம்புலனுஞ்
செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே
கோயிலாக நயந்தீரே.
2.054. 9
நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும் பிரமனும், உலகை அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும் காண இயலாதவாறு கனல் உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய புகலியுள் நன்மைகளைக் கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2057 நெடிதாய வன்சமணு
நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற்
கழறமேலோர் பொருளானீர்
பொடியாரு மேனியினீர்
புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.054.10
காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய சமணர்களும், நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப் பேச, மேலானதொரு மெய்ப் பொருளாக விளங்குபவரே! பொடிபூசியவரே! புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.
2058 ஒப்பரிய பூம்புகலி
யோங்குகோயின் மேயானை
அப்பரிசிற் பதியான
அணிகொண்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழாற்
றெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசி லிடர்நீங்கி
யிமையோருலகத் திருப்பாரே.
2.054.11
ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய கோயிலுள் மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால் ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை ஓதவல்லவர் எவ்வகையிலும் இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.054.திருப்புகலி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|