|
||||||||
மூன்றாம் திருமுறை-35 |
||||||||
3.035.திருத்தென்குடித்திட்டை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்.
தேவியார் - உலகநாயகியம்மை.
3170 முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே 3.035.1
நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற, உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.
3171 மகரமா டுங்கொடி மன்மத வேடனை
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே 3.035.2
மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வாள் போல் மின்னும் முத்துக்களும், பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று உயர்ந்து விளங்கும் மாளிகைகளையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
3172 கருவினா லன்றியே கருவெலா மாயவன்
உருவினா லன்றியே யுருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே 3.035.3
இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே எல்லாப் பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன். தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவமில்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உருவு கொள்ளும்படி தோற்றுவித்து அருள்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பருவகாலங்களிலும், திருவிழாக்காலங்களிலும் பாடலும், ஆடலும் செல்வத்தால் மிகச் சிறப்புற நடக்கும் புகழையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும். கருவினாலன்றி என்றது சிவபெருமான் கருவயப்பட்டுப் பிறவான் என்பதை உணர்த்தும்.
"பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை" (தி.6.ப.11 பா.1) என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை இங்கு நினைவுகூர்க. பிறப்பில்லாத அவனுக்கு இறப்புமில்லை. அவன் அநாதி நித்தப்பொருள். (அநாதி - தோற்றமும், அழிவுமில்லாதது) உருவினாலன்றி - தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாதவன். தன்பொருட்டு உருவு கொள்ளாது அடியார் பொருட்டு உருவம் கொள்பவன். "நானாவித உருவால் நமை ஆள்வான்" (தி.1 ப.9 பா.5) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கையும், "இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே" என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் (தி.6 ப.97 பா.10) இங்கு நினைவுகூர்க.
3173 உண்ணிலா வாவியா யோங்குதன் றன்மையை
விண்ணிலா ரறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே 3.035.4
இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல், தௌந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
3174 வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
அருந்தியா ரமுதவர்க் கருள்செய்தா னமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே 3.035.5
திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர், செருந்தி, மாதவி, செண்பகம் இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும்.
3175 ஊறினா ரோசையுள் ஒன்றினா ரொன்றிமால்
கூறினா ரமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே 3.035.6
இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர். எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர். திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர். குமரக்கடவுளின் தந்தை. அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் இவற்றைக் களைந்து, நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை அடக்கி, மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி, சிவனே மெய்ப்பொருள் எனத் தௌந்தவர்கள் வழிபடும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
3176 கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தௌளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே 3.035.7
காட்டிலுள்ள உயிர்களை வருத்தும் வேடர் குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பியபோது, தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி, தவத்தையுடைய கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தௌந்த நீர்நிலைகளில் மலர்ந்துள்ள தாமரைகளில் தண்டிலிருந்து தேன்பெருகிப் பாயும் வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
3177 மாலொடும் பொருதிறல் வாளரக் கன்னெரிந்
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடம்
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித்திட்டையே 3.035.8
திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும் வல்லமைபெற்ற அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழ்ச் சிக்குண்டு ஓலமிட்டு அலறும்படி தன் காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற மூக்குடைய கயல், வரால், சேல் போன்ற மீன்கள் வந்து பாயும் வயல்களையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
3178 நாரணன் றன்னொடு நான்முகன் றானுமாய்க்
காரணன் னடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே 3.035.9
திருமாலும், பிரமனும் தேடியும் அடிமுடி காணவொண்ணாதவாறு விளங்கிய, உலகிற்கு நிமித்த காரணமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூவுலக தேவர்கள் என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய புகழுடன் சிவபெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
3179 குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே 3.035.10
கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும், புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர். வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ, தௌந்த அலைகளையுடைய குளிர்ச்சியான ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள்.
3180 தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே 3.035.11
தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி, கடற்கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த, சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
3.035.திருத்தென்குடித்திட்டை |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|