|
||||||||
இரண்டாம் திருமுறை-56 |
||||||||
2.056.திருவிடைமருதூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
2070 பொங்குநூன் மார்பினீர்
பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர்
சாமவேத மோதினீர்
எங்குமெழிலார் மறையோர்கண்
முறையாலேத்த விடைமருதில்
மங்குல்தோய் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.056.1
திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம்கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.
2071 நீரார்ந்த செஞ்சடையீர்
நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன்
றுடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள்
பாகங்கொண்டீ ரிடைமருதில்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே. 2.056. 2
கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க் கருவி யாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.
2072 அழன்மல்கு மங்கையில்
ஏந்திப்பூத மவைபாடச்
சுழன்மல்கு மாடலீர்
சுடுகாடல்லாற் கருதாதீர்
எழின்மல்கு நான்மறையோர்
முறையாலேத்த விடைமருதில்
பொழில்மல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே.
2.056. 3
நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர்.
2073 பொல்லாப் படுதலையொன்
றேந்திப்புறங்காட் டாடலீர்
வில்லாற் புரமூன்றும்
எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும்
முறையாலேத்த விடைமருதில்
செல்வாய கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.
2.056.4
பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2074 வருந்திய மாதவத்தோர்
வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச
மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர்
சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே
கோயிலாகப் புக்கீரே.
2.056. 5
பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித் தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2075 சலமல்கு செஞ்சடையீர்
சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன்
றேந்திமயானத் தாடலீர்
இலமல்கு நான்மறையோ
ரினிதாவேத்த விடைமருதில்
புலமல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே. 2.056. 6
பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி, பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான்மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2076 புனமல்கு கொன்றையீர்
புலியினதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர்
செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ
ரேத்துஞ்சீர்கொ ளிடைமருதில்
கனமல்கு கோயிலே
கோயிலாகக் கலந்தீரே. 2.056. 7
காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள் விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2077 சிலையுய்த்த வெங்கணையாற்
புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்துந் திண்டோளு
நெரித்தீர் தையல்பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த விடைமருதில்
நலமொய்த்த கோயிலே
கோயிலாக நயந்தீரே.
2.056. 8
மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2078 மறைமல்கு நான்முகனு
மாலுமறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர்
கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்க
ளாலுஞ்சோலை யிடைமருதில்
நிறைமல்கு கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.
2.056. 9
வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2079 சின்போர்வைச் சாக்கியரும்
மாசுசேருஞ் சமணரும்
துன்பாய கட்டுரைகள்
சொல்லி யல்லல்தூற்றவே
இன்பாய வந்தணர்க
ளேத்துமேர்கொ ளிடைமருதில்
அன்பாய கோயிதேல
கோயிலாக வமர்ந்தீரே.
2.056. 10
பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்பு வடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2080 கல்லின் மணிமாடக்
கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான்
நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி யிடைமருதில்
ஏத்துபாட லிவைபத்தும்
சொல்லு வார்க்குங்
கேட்பார்க்குந் துயரம்இல்லையே.
2.056.11
கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
2.056.திருவிடைமருதூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|