|
||||||||
இரண்டாம் திருமுறை-57 |
||||||||
2.057.திருநல்லூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
2081 பெண்ணமருந் திருமேனி
யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே
பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057. 1
உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2082 அலைமல்கு தண்புனலும்
பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு
மனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற்
புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057. 2
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2083 குறைநிரம்பா வெண்மதியஞ்
சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ
டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும்
வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057. 3
என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறவைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர்.
2084 கூனமரும் வெண்பிறையும்
புனலுஞ்சூடுங் கொள்கையீர்
மானமரு மென்விழியாள்
பாகமாகு மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின்
வண்டுபாடுந் திருநல்லூர்
வானமருங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே. 2.057. 4
வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2085 நிணங்கவரு மூவிலையு
மனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ
டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும்
பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.5
நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2086 கார்மருவு பூங்கொன்றை
சூடிக்கமழ் புன்சடைதாழ
வார்மருவு மென்முலையாள்
பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக்
கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே
கோயிலாக விருந்தீரே.
2.057. 6
கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர்.
2087 ஊன்றோயும் வெண்மழுவு
மனலுமேந்தி யுமைகாண
மீன்றோயுந் திசைநிறைய
வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின்
வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.7
ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத் திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர்.
2088 காதமரும் வெண்குழையீர்
கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாண்
மறுகும் வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள்
பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.8
காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2089 போதின்மே லயன்றிருமால்
போற்றியும்மைக் காணாது
நாதனே யிவனென்று
நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள்
தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதரா ளவளோடு
மன்னுகோயில் மகிழ்ந்தீரே.
2.057. 9
தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக் காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையரோடு மகிழ்ந்து உறைகின்றீர்.
2090 பொல்லாத சமணரொடு
புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட்
டடியார்கள் போற்றோவா
நல்லார்க ளந்தணர்கள்
நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.
2.057.10
பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2091 கொந்தணவும் பொழில்புடைசூழ்
கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன்
சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள்
பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார்
சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.
2.057. 11
பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
2.057.திருநல்லூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|