|
||||||||
இரண்டாம் திருமுறை-58 |
||||||||
2.058.திருக்குடவாயில்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோணேசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2092 கலைவாழு மங்கையீர்
கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழுஞ் செஞ்சடையி
லரவும்பிறையு மமர்வித்தீர்
குலைவாழை கமுகம்பொன்
பவளம்பழுக்குங் குடவாயில்
நிலைவாழுங் கோயிலே
கோயிலாக நின்றீரே.
2.058. 1
மான் வாழும் கையினை உடையவரே! மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும், கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும் வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2093 அடியார்ந்த பைங்கழலுஞ்
சிலம்புமார்ப்ப வங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன்
றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர்
குலாவியேத்துங் குடவாயில்
படியார்ந்த கோயிலே
கோயிலாகப் பயின்றீரே.
2.058. 2
திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும், ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2094 கழலார்பூம் பாதத்தீ
ரோதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீ
ரண்டர்போற்று மளவினீர்
குழலார வண்டினங்கள்
கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.
2.058. 3
கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர்.
2095 மறியாருங் கைத்தலத்தீர்
மங்கைபாக மாகச்சேர்ந்
தெறியாரு மாமழுவு
மெரியுமேந்துங் கொள்கையீர்
குறியார வண்டினங்கள்
தேன்மிழற்றுங் குடவாயில்
நெறியாருங் கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.
2.058. 4
மான் பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர்.
2096 இழையார்ந்த கோவணமுங்
கீளுமெழிலா ருடையாகப்
பிழையாத சூலம்பெய்
தாடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே
கோயிலாக மிக்கீரே.
2.058.5
நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல் பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில் களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர்.
2097 அரவார்ந்த திருமேனி
யானவெண்ணீ றாடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண்
டிமையோரேத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை
வாசம்வீசுங் குடவாயில்
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.
2.058.6
பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே! குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.
2098 பாடலார் வாய்மொழியீர்
பைங்கண்வெள்ளே றூர்தியீர்
ஆடலார் மாநடத்தீ
ரரிவைபோற்று மாற்றலீர்
கோடலார் தும்பிமுரன்
றிசைமிழற்றுங் குடவாயில்
நீடலார் கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே. 2.058. 7
வேதப் பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை ஊர்தியாக உடையவரே! ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.
2099 கொங்கார்ந்த பைங்கமலத்
தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட வழலாய்
நிமிர்ந்தீ ரிலங்கைக்கோன்
தங்காதன் மாமுடியுந்
தாளுமடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே
கோயிலாகப் பரிந்தீரே.
2.058. 8
தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும், குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய் திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர்.
இப்பதிகத்தின் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.058.9
2100 தூசார்ந்த சாக்கியருந்
தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத்
தெழில்கொண்மாடக் குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோ
ரளவிற்குன்றா தடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.
2.058. 10
அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும் தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன் மொழிகளை வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில், தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில் குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர்.
2101 நளிர்பூந் திரைமல்கு
காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற்
கோயின்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை
யுரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத்
தகுசீர்வானத் திருப்பாரே.
2.058. 11
தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய இறைவனை, விளங்கும் தமிழ் மாலையாக உரைத்த பாடல்களாகிய இவற்றைவல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
2.058.திருக்குடவாயில் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|