|
||||||||
இரண்டாம் திருமுறை-60 |
||||||||
2.060.திருப்பாசூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்.
தேவியார் - பசுபதிநாயகியம்மை.
2113 சிந்தை யிடையார் தலையின் மிசையார்
செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென்
மனத்துள்ளார்
மைந்தா மணாளா வென்ன மகிழ்வா
ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த
பாசூரே.
2.060. 1
மனத்திலும் தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.
2114 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும்
பெம்மானென்
றாருந் தனையு மடியா ரேத்த
வருள்செய்வார்
ஊரு மரவ முடையார் வாழு
மூர்போலும்
பாரின் மிசையார் பாட லோவாப்
பாசூரே.
2.060. 2
இடம் விட்டுச்செல்லும் போதும், வரும்போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்.
2115 கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங்
கசிவார்கண்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும்
விகிர்தனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவு
மூர்போலும்
பைவாய் நாகங் கோடலீனும்
பாசூரே.
2.060. 3
கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக் காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.
2116 பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங்
குளிர்வித்தார்
தங்கா தலியுந் தாமும் வாழு
மூர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும்
பாசூரே.
2.060. 4
சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும்.
2117 ஆடற் புரியு மைவா யரவொன்
றரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும்
பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையா
ரூர்போலும்
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப்
பாசூரே.
2.060.5
ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும்.
2118 கானின் றதிரக் கனல்வாய் நாகங்
கச்சாகத்
தோலொன் றுடையார் விடையார் தம்மைத்
தொழுவார்கள்
மால்கொண் டோட மையல் தீர்ப்பா
ரூர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த
பாசூரே.
2.060.6
திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலைஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர். தம்மைத்தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆம்.
2119 கண்ணி னயலே கண்ணொன் றுடையார்
கழலுன்னி
எண்ணுந் தனையு மடியா ரேத்த
வருள்செய்வார்
உண்ணின் றுருக வுகவை தருவா
ரூர்போலும்
பண்ணின் மொழியார் பாட லோவாப்
பாசூரே.
2.060. 7
இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும் போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசைபோல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும்.
2120 தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக்
கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார்
தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா
ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த
பாசூரே.
2.060. 8
புகழ்குன்றாத தௌந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப் பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும்.
2121 நகுவாய் மலர்மே லயனு நாகத்
தணையானும்
புகுவா யறியார் புறநின் றோரார்
போற்றோவார்
செகுவா யுகுபற் றலைசேர் கையா
ரூர்போலும்
பகுவாய் நாரை யாரல் வாரும்
பாசூரே.
2.060.9
விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகு மிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுலுடைய தலையோடு சேர்ந்தகையினை உடையவர். சிவபெருமான் அவரது ஊர் பிளந்த வாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை வெளவி உண்ணும் பாசூராகும்.
2122 தூய வெயினின் றுழல்வார் துவர்தோ
யாடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார்
நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தா
ரூர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப்
பாசூரே.
2.060.10
நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.
2123 ஞான முணர்வான் காழி ஞான
சம்பந்தன்
தேனும் வண்டு மின்னிசை பாடுந்
திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாட
லிவைவல்லார்
ஊன மிலரா யும்பர் வானத்
துறைவாரே.
2.060. 11
கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்.
திருச்சிற்றம்பலம்
2.060.திருப்பாசூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|