|
||||||||
மூன்றாம் திருமுறை-40 |
||||||||
3.040.தனித்திருவிருக்குக்குறள்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
3222 கல்லானீழல், அல்லாத்தேவை
நல்லார்பேணார், அல்லோநாமே 3.040.1
கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார். நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம்.
3223 கொன்றைசூடி, நின்றதேவை
அன்றியொன்று, நன்றிலோமே 3.040.2
கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவ பெருமானை அன்றி, பிறிதொரு தெய்வமும் முக்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம்.
3224 கல்லாநெஞ்சின், நில்லானீசன்
சொல்லாதாரோ, டல்லோநாமே 3.040.3
இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில் அவன் நில்லான். ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம்.
3225 கூற்றுதைத்த, நீற்றினானைப்
போற்றுவார்கள், தோற்றினாரே 3.040.4
மார்க்கண்டடேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த, தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர்.
3226 காட்டுளாடும், பாட்டுளானை
நாட்டுளாரும், தேட்டுளாரே 3.040.5
சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும் பாமாலையை உடையவன். சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள்.
3227 தக்கன்வேள்விப், பொக்கந்தீர்த்த
மிக்கதேவர், பக்கத்தோமே 3.040.6
முழுமுதற்பொருளான சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும், அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம் உள்ளோம்.
3228 பெண்ணாணாய, விண்ணோர்கோவை
நண்ணாதாரை, எண்ணோநாமே 3.040.7
பெண்ணாகவும், ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை.
3229 தூர்த்தன்வீரம், தீர்த்தகோவை
ஆத்தமாக, ஏத்தினோமே 3.040.8
துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து, பின் அவன் தன் தவறுணர்ந்து சாமகானம்பாடி இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும், நீண்ட வாழ்நாளும் அருளிய இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம்.
3230 பூவினானும், தாவினானும்
நாவினாலும், நோவினாரே 3.040.9
தாமரைப் பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும், இறைவனின் திருமுடியையும், திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி உருகிநின்றனர்.
3231 மொட்டமணர், கட்டர்தேரர்
பிட்டர்சொல்லை, விட்டுளோமே 3.040.10
தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன் விளங்கும் சமணர்களும், கட்டான உடலமைப்புடைய புத்தர்களும், சைவசமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது விட்டோம்.
3232 அந்தண்காழிப், பந்தன்சொல்லைச்
சிந்தைசெய்வோர், உய்த்துளோரே 3.040.11
அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து பாடுபடுவர்கள் உய்தி பெற்றவர்களாவர்.
திருச்சிற்றம்பலம்.
3.040.தனித்திருவிருக்குக்குறள் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|