|
||||||||
மூன்றாம் திருமுறை-41 |
||||||||
3.041.திருவேகம்பம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
3233 கருவார்கச்சித், திருவேகம்பத்
தொருவாவென்ன, மருவாவினையே 3.041.1
யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப் போற்றி வணங்க வினைவந்து சாராது.
3234 மதியார்கச்சி, நதியேகம்பம்
விதியாலேத்தப், பதியாவாரே 3.041.2
மதி தவழும் மாடங்களையுடைய கச்சியில் கம்பை நதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தைச் சிவாகம விதிப்படி அன்பர்கள் போற்றி வணங்கச் சிவகணங்களுக்குத் தலைமையாய் விளங்குவார்கள்.
3235 கலியார்கச்சி, மலியேகம்பம்
பலியாற்போற்ற, நலியாவினையே 3.041.3
விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும் விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால் வரும் துன்பம் இல்லை.
3236 வரமார்கச்சிப், புரமேகம்பம்
பரவாவேத்த, விரவாவினையே 3.041.4
தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும். இத்திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும் .
3237 படமார்கச்சி, இடமேகம்பத்
துடையாயென்ன, அடையாவினையே 3.041.5
சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் எங்கள் தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது.
3238 நலமார்கச்சி, நிலவேகம்பம்
குலவாவேத்தக், கலவாவினையே 3.041.6
நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும்.
3239 கரியின்னுரியன், திருவேகம்பன்
பெரியபுரமூன், றெரிசெய்தானே 3.041.7
யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட இறைவனான திருவேகம்பப் பெருமான், தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும் எரியுண்ணும்படி செய்தார்.
3240 இலங்கையரசைத், துலங்கவூன்றும்
நலங்கொள்கம்பன், இலங்குசரணே 3.041.8
இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி, அவன் நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே ஒளிமிக்க வாழ்விற்குரிய வழியாகும்.
3241 மறையோனரியும், அறியாவனலன்
நெறியேகம்பம், குறியாற்றொழுமே 3.041.9
பிரமனும், திருமாலும் அறியமுடியாத வண்ணம் நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப நாதராக நெறியாகவும், போற்றித்தொழப் பெறும் குறியாகவும் உள்ளார்.
3242 பறியாத்தேரர், நெறியில்கச்சிச்
செறிகொள்கம்பம், குறுகுவோமே 3.041.10
தலைமயிர் பறியாத புத்தர்களும், அது பறிக்கப்பட்ட சமணர்களும் கூறும் நெறியில் அமையாது, கச்சியில் ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து வழிபடுவோமாக.
3243 கொச்சைவேந்தன், கச்சிக்கம்பம்
மெச்சுஞ்சொல்லை, நச்சும்புகழே 3.041.11
கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் திருக்கச்சியேகம்பத்தைப் போற்றிப்பாடிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
3.041.திருவேகம்பம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|