|
||||||||
மூன்றாம் திருமுறை-42 |
||||||||
3.042.திருச்சிற்றேமம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பொன்வைத்தநாதர்.
தேவியார் - அகிலாண்டேசுவரியம்மை.
3244 நிறைவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோ
ராடன்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற்
பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலா
மேத்தநின்ற பெருமானே
3.042.1
வெண்மையான முழுநிலவு போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல் புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர்.
3245 மாகத்திங்கள் வாண்முக
மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ
ராடன்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ்
மிடைசிற்றேம மேவினான்
ஆகத்தேர்கொ ளாமையைப்
பூண்டவண்ண லல்லனே
3.042.2
ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம் திகழும் சோலைசூழ்ந்த திருச்சிறறமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ?
3246 நெடுவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ
ராடன்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற்
பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற்
காய்ந்தகடவு ளல்லனே
3.042.3
வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ?
3247 கதிரார் திங்கள் வாண்முக
மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ
ராடன்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை
எழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்க ணேறுடை
யாதிமூர்த்தி யல்லனே
3.042.4
கதிர்வீசும் சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட ஆதிமூர்த்தி அல்லரோ?
3248 வானார்திங்கள் வாண்முக
மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடிய
ராடன்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந்
திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும்
மகிழ்ந்தமைந்த னல்லனே
3.042.5
வானில் விளங்கும் சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ?
3249 பனிவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ
ராடன்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத்
தாமம்சூழ்சிற் றேமத்தான்
முனிவு மூப்புநீக்கிய
முக்கண்மூர்த்தி யல்லனே
3.042.6
குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி ஆடல்புரிகின்றவர் இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு அற்றவ ராய், மூப்பினை அடையப்பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?
3250 கிளருந்திங்கள் வாண்முக
மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ
ராடன்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார்
தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூன் மார்பனென்
உள்ளத்துள்ளான் அல்லனே
3.042.7
கிளர்ந்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன் துளிக்கும் மலர்மாலைகளும் சூழ விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரிநூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ?
3251 சூழ்ந்ததிங்கள் வாண்முக
மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ
ராடன்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான்
றடவரையைத்தன் றாளினால்
ஆழ்ந்தவரக்க னொல்கவன்
றடர்த்தவண்ண லல்லனே
3.042.8
சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லரோ?
3252 தனிவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ
ராடன்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தா
னலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா
மழுவாட்செல்வ னல்லனே
3.042.9
ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த சடையில் இளம்பிறைச் சந்திரனைச் சூடித்திருநடனம் செய்கின்ற மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ?
3253 வெள்ளைத்திங்கள் வாண்முக
மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ
ராடன்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா
னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட்
கரந்துவைத்தான் அல்லனே
3.042.10
வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர்.
3254 கல்லிலோத மல்குதண்
கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ்
நவிலுஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப்
பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவா
ரல்லலின்றி வாழ்வரே
3.042.11
கற்களால் ஆகிய மதிலில் கடல் அலைகள் மல்கும், குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றதிருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில் அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
3.042.திருச்சிற்றேமம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|