|
||||||||
மூன்றாம் திருமுறை-43 |
||||||||
3.043.சீகாழி
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3255 சந்த மார்முலை யாடன கூறனார்
வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே 3.043.1
இறைவர் அழகிய திருமுலைகளையுடைய உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். வெந்த திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர். நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய என் தந்தையாராகிய சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில் நன்கு பதிந்துள்ளன.
3256 மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
தேனி டங்கொளுந் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே 3.043.2
மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட சிவந்த சடைமுடியின்மீது, தேன் துளிக்கும் கொன்றை மாலையை அணிந்தவர். நறுமணம் திகழும் குளிர்ந்த வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் இந்த உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர்.
3257 மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொண் மான்மறி யார்கடற் காழியுள்
ஐய னந்தணர்போற்ற இருக்குமே 3.043.3
நஞ்சுண்டதால் மை போன்ற கறுத்த கண்டத்தை உடையவரும், வானில் விளங்கும் சந்திரனைச் சடைமுடியில் சூடி, படமெடுத்தாடும் பாம்பினை ஆட்டும் படிறரும், இளமான்கன்றை இடக்கரத்தில் ஏந்தியுள்ள தலைவருமான சிவபெருமான், அந்தணர்கள் போற்றக் கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளுகின்றார்.
3258 3257. மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொண் மான்மறி யார்கடற் காழியுள்
ஐய னந்தணர்போற்ற இருக்குமே 3.043.3
புற்றில் வாழும் பாம்பையும், தும்பைப்பூ மாலையையும், வன்னிப் பத்திரத்தையும் தமது கற்றையான நீண்ட சடைமேல் அணிந்து, சீகாழியில் உமாதேவியோடு வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானின் பொன்போன்ற திருவடிகளைச் சமயம் நேர்ந்தபொழுது தாமதியாது உடனே துதித்துத் தியானித்து அவனருளை உணர்வீர்களாக.
3259 நலியுங் குற்றமு நம்முட னோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே 3.043.5
நம் மனத்தை வருத்தும் குற்றங்களும், தீவினைகளால் நம் உடலை வருத்தும் நோய்களும், மெலிந்து விலக விரும்புவீர்களாயின், கையால் வேள்வி வளர்த்துக் கொடிய கலியினால் ஏற்படும் துன்பத்தை ஓட்டும் அந்தணர்கள் வாழ்கின்ற கடல்சூழ்ந்த சீகாழியில், அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய செஞ்சடையானாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுங்கள்.
3260 பெண்ணொர் கூறினர் பேயுட னாடுவர்
பண்ணு மேத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய வடிகள் சரிதையே 3.043.6
சிவபெருமான் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர். பேய்க்கணங்கள் சூழ ஆடுபவர். உலகத்தார் போற்றும்படி நல்ல பண்களை ஏழிசைகளோடு பாடிய வேடத்தர், மூன்று கண்களை உடையவர். இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும்.
3261 பற்று மானு மழுவு மழகுற
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்ற மேற துகந்தார் பெருமையே 3.043.7
பெருமானார் தம் திருக்கரத்திலே மானையும், மழுவையும் அழகுற ஏந்தி, ஊர்முழுவதும் திரிந்து பிச்சை எடுக்க முற்படுவார். வேதங்களை நன்கு கற்ற பெருமையுடைய நல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் இடபத்தை வாகனமாக விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அச்சிவபெருமானது தன்மை இத்தன்மைத்தாகும்.
3262 எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுட்
கொடித்த யங்குநற் கோயிலு ளின்புற
இடத்து மாதொடு தாமு மிருப்பரே 3.043.8
திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வல்லரக்கனான இராவணனின் முடியும், தோளும் நெரியுமாறு அடர்த்து, பின் அவன் எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள் செய்த சிவபெருமான் சீகாழியில் கொடிகள் விளங்குகின்ற அழகிய திருக்கோயிலுள் தம் திருமேனியின் இடப்புறத்தில் உமாதேவியை உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருந்தருளுவர்.
3263 காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலு நான்முகன் றானும் வனப்புற
ஓல மிட்டுமுன் றேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே 3.043.9
காலன் உயிரைப் போக்கிய இறைவன் திருவடியைத் திருமாலும், பிரமனும் வனப்புறும் தோற்றத்தினராய் ஓலமிட்டுத் தேடியும் காணவொண்ணாத சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் பெருமையுடன் திகழும் சீகாழியாகும்.
3264 உருவ நீத்தவர் தாமு முறுதுவர்
தருவ லாடையி னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேஅடைந் துய்ம்மினே 3.043.10
தமது கடுமையான சமய ஒழுக்கத்தினால் உடலின் இயற்கை நிறம் மாறிக் கருநிறமான சமணர்களும், துவர் நிறம் ஊட்டப்பட்ட ஆடையை உடுக்கின்ற புத்தர்களும் தகைமை யற்றவர்கள். உங்களுக்கு நல்ல காரியம் கைகூட வேண்டுமென்று விரும்பினீர்களேயானால், கடலை அடுத்த சீகாழியில் வீற்றிருந் தருளும் ஒப்பற்ற சிவபெருமானின் சிவந்த திருவடிகளைச் சரணடைந்து உய்வீர்களாக!
3265 கானல் வந்துல வுங்கடற் காழியுள்
ஈன மில்லி யிணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே 3.043.11
கரையிலுள்ள சோலைகளிலிருந்து நறுமணம் வீசும் கடலை அடுத்த சீகாழியில், அழிவற்று என்றும் நித்தப் பொருளாக விளங்கிடும் சிவபெருமானுடைய இரண்டு திருவடி களையும் வணங்கிடும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை மனமகிழ்ச்சியுடன் பாட அத்தமிழ் மேலான வீடுபேற்றைத் தரும்.
திருச்சிற்றம்பலம்
3.043.சீகாழி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|