|
||||||||
இரண்டாம் திருமுறை-62 |
||||||||
2.062.திருமீயச்சூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர்.
தேவியார் - சுந்தரநாயகியம்மை.
2135 காயச் செவ்விக் காமற் காய்ந்து
கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த
பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன்
றாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை
வீட்டுமே.
2.062. 1
அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.
2136 பூவார் சடையின் முடிமேற் புனல
ரனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண்
டலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம்
பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீயச்
சூராரே.
2.062.2
திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடைமுடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.
2137 பொன்னேர் கொன்றை மாலை புரளு
மகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீயச்
சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால்
வணங்குவார்
அந்நே ரிமையோ ருலக மெய்தற்
கரிதன்றே.
2.062. 3
பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரிதன்று.
2138 வேக மதநல் லியானை வெருவ
வுரிபோர்த்துப்
பாக முமையோ டாகப் படிதம்
பலபாட
நாக மரைமே லசைத்து நடமா
டியநம்பன்
மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச்
சூரானே.
2.062. 4
வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான்.
2139 விடையார் கொடியார் சடைமேல் விளங்கும்
பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாட
லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர்
கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீயச்
சூராரே.
2.062. 5
திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்தபூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர்.
2140 குளிருஞ் சடைகொண் முடிமேற் கோல
மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன்
கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட
நவினம்பன்
மிளிரும் மரவ முடையான் மீயச்
சூரானே.
2.062. 6
திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்குபவனும் அரவினை அணிந்தவன்.
2141 நீல வடிவர் மிடறு நெடியர்
நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை
யறிவொண்ணார்
காலர் கழலர் கரியி னுரியர்
மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச்
சூராரே.
2.062.7
திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர்.யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப் படைப்பவர்.
2142 புலியி னுரிதோ லாடை பூசும்
பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா
ருமையஞ்ச
வலிய திரடோள் வன்க ணரக்கர்
கோன்றன்னை
மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச்
சூராரே.
2.062. 8
திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர்.
2143 காதின் மிளிருங் குழையர் கரிய
கண்டத்தார்
போதி லவனு மாலுந் தொழப்பொங்
கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப்
புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச்
சூராரே.
2.062. 9
வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர்.
2144 கண்டார் நாணும் படியார் கலிங்க
முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த
கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய
வரைவில்லா
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச்
சூராரே.
2.062. 10
கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.
2145 வேட முடைய பெருமா னுறையு
மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான
சம்பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து
மொழிந்துள்கி
ஆடு மடியா ரகல்வா னுலகம்
அடைவாரே.
2.062.11
பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
2.062.திருமீயச்சூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|