|
||||||||
இரண்டாம் திருமுறை-63 |
||||||||
2.063.திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர்.
தேவியார் - அழகம்மை.
2146 மின்னுஞ் சடைமே லிளவெண் டிங்கள்
விளங்கவே
துன்னுங் கடனஞ் சிருடோய் கண்டர்
தொன்மூதூர்
அன்னம் படியும் புனலா ரரிசில்
அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென்
கரைமேற் புத்தூரே.
2.063.1
மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத்தராய் விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியையும் கொண்டு வீசும் தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும்.
2147 மேவா வசுரர் மேவெயில் வேவ
மலைவில்லால்
ஏவா ரெரிவெங் கணையா லெய்தா
னெய்துமூர்
நாவா னாத னாம மோதி
நாடோறும்
பூவா னீராற் பூசுரர் போற்றும்
புத்தூரே.
2.063. 2
பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும் வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன் நாமங்களை நாடொறும் ஓதிப் பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும்.
2148 பல்லார் தலைசேர் மாலை சூடிப்
பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ
ரேறேறிக்
கல்லார் மங்கை பங்க ரேனுங்
காணுங்கால்
பொல்லா ரல்ல ரழகியர் புத்தூர்ப்
புனிதரே.
2.063. 3
புத்தூர்ப்புனிதர், பற்களோடு கூடிய தலைமாலையைச் சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர். ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர்.
2149 வரியேர் வளையா ளரிவை யஞ்ச
வருகின்ற
கரியே ருரிவை போர்த்த கடவுள்
கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங்
கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப்
புத்தூரே.
2.063. 4
வரிகளும் அழகும் பொருந்திய வளையல்களை அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள் சூழ்ந்து அழகிய நெற் பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.
2150 என்போ டரவ மேனத் தெயிறோ
டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட
மணிமார்பர்
அன்போ டுருகு மடியார்க் கன்ப
ரமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப்
புத்தூரே.
2.063. 5
எலும், பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும்.
2151 வள்ளி முலைதோய் குமரன் றாதை
வான்றோயும்
வெள்ளி மலைபோல் விடையொன்
றுடையான் மேவுமூர்
தௌளி வருநீ ரரிசிற் றென்பால்
சிறைவண்டும்
புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த
புத்தூரே.
2.063.6
வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய் வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன் எழுந்தருளிய ஊர், தௌவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.
2152 நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி
னீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச்
செய்தானூர்
அலந்த வடியா னற்றைக் கன்றோர்
காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும்
புத்தூரே.
2.063. 7
நிலம், தண்ணீர், அனல், காற்று, விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.
2153 இத்தே ரேக விம்மலை பேர்ப்ப
னென்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீ ழலறப்
பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும்
மூரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள்
போகுமே.
2.063.8
இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன் மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும்.
2154 முள்ளார் கமலத் தயன்மான் முடியோடு
அடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியா
னூர்போலும்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல்
கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும்
புத்தூரே.
2.063.9
முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு அடி தேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய் விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல், தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள் நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும்.
2155 கையார் சோறு கவர்குண் டர்களுந்
துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லு
மெய்யல்ல
பொய்யா மொழியா லந்தணர் போற்றும்
புத்தூரில்
ஐயா வென்பார்க் கையுறவின்றி
யழகாமே.
2.063. 10
கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும், துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை. மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில் எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு உண்டாம்.
2156 நறவங் கமழ்பூங் காழி ஞான
சம்பந்தன்
பொறிகொ ளரவம் பூண்டா னாண்ட
புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப
வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ டினப
மடைவாரே.
2.063. 11
தேன் மணம் கமழும் அழகிய காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆட்சிபுரியும் புத்தூர் மேல் வளமை செறிந்த தமிழால் செய்த இம்மாலையைச் செப்ப வல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான் திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.063.திருஅரிசிற்கரைப்புத்தூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|