|
||||||||
மூன்றாம் திருமுறை-44 |
||||||||
3.044.திருக்கழிப்பாலை
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - வேதநாயகியம்மை.
3266 வெந்த குங்கி லியப்புகை விம்மவே
கந்த நின்றுல வுங்கழிப் பாலையார்
அந்த மும்மள வும்மறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே 3.044.1
நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப்பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர். இன்ன தன்மையர் என்று அளந்தறியமுடியாதவர். அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும்.
3267 வானி லங்க விளங்கு மிளம்பிறை
தான லங்க லுகந்த தலைவனார்
கானி லங்க வருங்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே 3.044.2
வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை மாலைப்போல் விரும்பி அணிந்த தலைவரான சிவ பெருமான், கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார்.
3268 கொடிகொ ளேற்றினர் கூற்றை யுதைத்தனர்
பொடிகொண் மார்பினிற் பூண்டதொ ராமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன வார்க்கறி வொண்ணுமே 3.044.3
இறைவர் எருதுக் கொடியுடையவர். காலனைக் காலால் உதைத்தவர். திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும்? ஒருவராலும் முடியாது.
3269 பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
தண்ண லங்க லுகந்த தலைவனார்
கண்ண லங்கவ ருங்கழிப் பாலையுள்
அண்ண லெங்கட வுள்ளவன் அல்லனே 3.044.4
பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும் பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார். அவரே எம் கடவுள் அல்லரே?
3270 ஏரி னாருல கத்திமை யோரொடும்
பாரி னாருட னேபர வப்படுங்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே 3.044.5
எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு, மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும், மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள்.
3271 துள்ளு மான்மறி யங்கையி லேந்தியூர்
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே 3.044.6
துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய கையில் ஏந்தி, ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்0பாலையை நினைந்து ஏத்த வினையாவும் நீங்கும்.
3272 மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக்
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே 3.044.7
மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும், வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி, தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும், பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்த வனும், முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக!
3273 இலங்கை மன்னனை யீரைந் திரட்டிதோள்
துலங்க வூன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே 3.044.8
இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நொறுங்கும்படி கயிலைமலையில் தன்காற்பெருவிரலை ஊன்றிய, தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, மரக்கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும்.
3274 ஆட்சி யாலல ரானொடு மாலுமாய்த்
தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
காட்சி யாலறி யான்கழிப் பாலையை
மாட்சி யாற்றொழு வார்வினை மாயுமே 3.044.0
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திருமுடியையும், திருவடியையும் அறிய முற்பட்டு, தமது தாழ்ச்சியால் அவற்றை அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர். நூலறிவாலும், ஆன்ம அறிவாலும் அறியப்படாதவனான சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும்.
3275 செய்ய நுண்டுவ ராடையி னாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை யெனோகழிப் பாலையெம்
ஐயன் சேவடி யேயடைந் துய்ம்மினே 3.044.10
சிவந்த மெல்லிய மஞ்சட் காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும், அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ? திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள்.
3276 அந்தண் காழி யருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுல காடன் முறைமையே 3.044.11
அழகிய, குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன், பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப்பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர்.
திருச்சிற்றம்பலம்
3.044.திருக்கழிப்பாலை |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|