|
||||||||
மூன்றாம் திருமுறை-47 |
||||||||
3.047.திருஆலவாய்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
3298 காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே 3.047.1
காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய இறைவனே! மூன்று கண்ணுடைய பெருமானே! நல்வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது? உரை செய்வாயாக!
3299 மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே 3.047.2
மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம் யாதோ? உரைப்பாயாக.
3300 மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே 3.047.3
இப் பூவிலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது! உரைத்தருள்வாயாக.
3301 ஓதி யோத்திறி யாவம ணாதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு வாலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே 3.047.4
வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக!
3302 வைய மார்புக ழாயடி யார்தொழும்
செய்கை யார்திரு வாலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லுமமண் கையரைப்
பைய வாது செயத்திரு வுள்ளமே 3.047.5
உலகெங்கும் பரவிய புகழை உடையவனே! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய கீழ்மக்களுடன் மெதுவாக நான் வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாது? உரைத்தருள்வாயாக!
3303 நாறு சேர்வயற் றண்டலை மிண்டிய
தேற லார்திரு வாலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு உள்ளமே 3.047.6
நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும், சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது? சொல்லியருள்வாயாக!
3304 பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும்
தொண்ட ருக்கௌ யாய்திரு வாலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே 3.047.7
தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப் பொருளாக விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில் வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?
3305 அரக்கன் தான்கிரி யேற்றவன் றன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு வாலவாய்ப்
பரக்கு மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே 3.047.8
கயிலைமலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின் முடிகளை நெரித்து, அவனது செருக்கினை அழித்தவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! எங்கும் பரவிய புகழை உடையவரே! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
3306 மாலும் நான்முக னும்மறி யாநெறி
ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு யுள்ளமே 3.047.9
திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே! இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
3307 கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே 3.047.10
நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்த வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?
3308 செந்தெ னாமுர லுந்திரு வாலவாய்
மைந்த னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே 3.047.11
வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறிகளிலுள்ள குற்றங்கள் நீங்கச் சந்தமுடைய தழிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க ஓதுவீர்களாக!
திருச்சிற்றம்பலம்
3.047.திருஆலவாய் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|