|
||||||||
இரண்டாம் திருமுறை-64 |
||||||||
2.064.திருமுதுகுன்றம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2157 தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய்
பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட்
கருள்செய்வாய்
ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா
யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயின்
முதுகுன்றே.
2.064. 1
அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையை பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
2158 எந்தை யிவனென் றிரவி முதலா
விறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி லாகத்
திகழ்வானை
மந்தி யேறி யினமா மலர்கள்
பலகொண்டு
முந்தித் தொழுது வணங்குங் கோயின்
முதுகுன்றே.
2.064.2
எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
2159 நீடு மலரும் புனலுங் கொண்டு
நிரந்தரம்
தேடு மடியார் சிந்தை யுள்ளே
திகழ்வானைப்
பாடுங் குயிலி னயலே கிள்ளை
பயின்றேத்த
மூடுஞ் சோலை முகிறோய் கோயின்
முதுகுன்றே.
2.064. 3
மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
2160 தெரிந்த வடியார் சிவனே யென்று
திசைதோறும்
குருந்த மலருங் குரவி னலருங்
கொண்டேந்தி
இருந்து நின்று மிரவும் பகலு
மேத்துஞ்சீர்
முரிந்து மேகந் தவழுஞ் சோலை
முதுகுன்றே.
2.064.4
அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும் விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும்.
2161 வைத்த நிதியே மணியே யென்று
வருந்தித்தம்
சித்த நைந்து சிவனே யென்பார்
சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக்
கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர் கோயின்
முதுகுன்றே.
2.064.5
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.
2162 வம்பார் கொன்றை வன்னி மத்த
மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமா
னுறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை
குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடு
முதுகுன்றே.
2.064. 6
மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடிவகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முது குன்றாகும்.
2163 வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை
வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா
னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று
புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை
முதுகுன்றே.
2.064. 8
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்.
2164 அல்லி மலர்மே லயனு மரவின்
அணையானும்
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச்
சோதியூர்
கொல்லை வேடர் கூடி நின்று
கும்பிட
முல்லை யயலே முறுவல் செய்யும்
முதுகுன்றே.
2.064. 9
அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக்கொடிகள் அருகில் இருந்துகண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும்.
2165 கருகு முடலார் கஞ்சி யுண்டு
கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா
னுறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச்
சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய்
முதுகுன்றே.
2.064.10
கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.
2166 அறையார் கடல்சூ ழந்தண் காழிச்
சம்பந்தன்
முறையான் முனிவர் வணங்குங் கோயின்
முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட
வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள்
பிரியாரே.
2.064. 11
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார்.
திருச்சிற்றம்பலம்
2.064.திருமுதுகுன்றம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|