|
||||||||
மூன்றாம் திருமுறை-48 |
||||||||
3.048.திருமழபாடி
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
3309 அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழ வார்தக வாளரே 3.048.1
இறைவன் அழகிய கையில் நெருப்பேந்தியவன். அழகிய செஞ்சடையில் கங்கையைத் தாங்கி, இடம், பொருள், காலம் இவற்றைக் கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான் தன் திருமேனியின் இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு வீற்றிருந்தருளும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர்.
3310 விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாமழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே 3.048.2
திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு விதியாவதும், அவ்விதியின் விளைவாவதும், ஒளியிற் கலப்பதாகிய முத்தி ஆவதுமாம். மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும் சிவ ஞானத்தை விளைவிக்கும் அத்தகைய திருவடிகளை வழிபடுவீர்களாக.
3311 முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமி னுந்துய ரானவை தீரவே 3.048.3
இறைவன் முழவு என்னும் வாத்தியம் உடையவன். சுடுகாட்டில் உறையும் பேய்க்கணத்துடன் குலவி நடனம்புரிபவன். அழகிய கையில் மழுப்படையை உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி தொழுது போற்றுங்கள்.
3312 கலையி னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே 3.048.4
இறைவன் ஆயகலைகள் அறுபத்துநான்கு ஆனவர். நான்கு மறைகள் ஆகியவன். உயிர்கள் சரண்புகும் இடமாகிய கயிலை மலையினை உடையவன். பகையசுரர்களின் திரிபுரங்களை எரியுண்ணுமாறு அக்கினிக்கணையை ஏவிய, மேருமலையை வில்லாக உடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால் வணங்கிப் போற்றத் தவத்தின் பலன் கைகூடும்.
3313 நல்வி னைப்பய னான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்து மதுபுக ழாகுமே 3.048.5
இறைவன் நல்வினையின் பயனாகியவன். நான்மறையின் பொருளாகியவன். கல்விப் பயனாகிய கருத்தன். உருத்திரனாகத் திகழ்பவன். அச்செல்வன் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் போற்றுங்கள். அது உமக்குப் புகழ் தரும்.
3314 நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
ஆடி னானெரி கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே 3.048.6
பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய் விளங்குகின்றான். அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம் ஆடுபவன். பத்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில் இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு வறுமை இல்லை.
3315 மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
மன்னி னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே 3.048.7
மின்னலைப் போன்று ஒளிரும் நுண்ணிய இடையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற மாமழபாடியை இசைப்பாடலால் போற்றி வழிபாடு செய்யும் அன்பர்களின் வினையாவும் நீங்கும்.
3316 தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னி லங்கவ டர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே 3.048.8
இராவணனைச் செழுமையான கயிலைமலையின் கீழ் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான். அவர் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற உடம்பில் உறுகின்ற பிணி யாவும் நீங்கும்.
3317 திருவி னாயக னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந் தொழத்தழன் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே 3.048.9
திருமகளின் நாயகனாகிய திருமாலும், செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும், தொழுது போற்ற நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள் பற்றிலிருந்து நீங்கியவராவர்.
3318 நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினு மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திற முள்கவே
மெலியு நம்முடன் மேல்வினை யானவே 3.048.10
நன்மை அறியாத சமணர்களும், புத்தர்களும் பிறரை வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப் பொருளாகக் கொள்ளாது, திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடனம் புரியும் சிவபெருமானின் அருட்செயலை நினைந்து போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினையாவும் மெலிந்து அழியும்.
3319 மந்த முந்து பொழின்மழ பாடியுள்
எந்தை சந்த மினிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுண் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே 3.048.11
தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவ பெருமானைச் சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி, வாசனை வீசும் கடலுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
3.048.திருமழபாடி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|