|
||||||||
பார்வதிதேவி முருகப்பெருமானுக்கு வேல் தந்த நாள் - ஜோதிடர் பலராமன் |
||||||||
பார்வதிதேவி முருகப்பெருமானுக்கு வேல் தந்த நாள். ஜோதிடர் பலராமன்
ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே தைப்பூசம் நாளாகும். இந்த வருடம் பிப்ரவரி ஏழாம் தேதி தை மாதம் இருபத்திநான்காம் நாள் செவ்வாய்க் கிழமை முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகர் கோயிலிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணம் என்ன? இந்த உலகத்துக்கே அன்னையான பார்வதிதேவி முருகப்பெருமானுக்கு வேல் தந்தது தைப்பூச நன்னாளில் தான். முன்னொரு காலத்தில் கிரௌஞ்சன் மற்றும் தரகாசூரன் என்ற இரண்டு அரக்கர்கள் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் செய்து அவர்களை இறைவனை வணங்க முடியாமல் தொல்லைகள் கொடுத்து வந்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த முனிவர்கள் பார்வதி பரமேஸ்வரரிடம் சென்று முறையிட்டனர். அரக்கர்களை அழிக்க சிவபெருமானால் படைக்கப்பட்டவரே வல்லமை வாய்ந்த முருகர். மலை வடிவில் இருந்த கிரௌஞ்சனையும் யானைத்தலை கொண்ட தாரகசூரனையும் அழிப்பதற்காக சிவபெருமானும் பார்வதி தேவியும் அங்குசம், வில், அம்பு, தண்டாயுதம், வஜ்ஜிராயுதம், மழு ஆகிய பதினோரு வகையான ஆயுதங்களை முருகப்பெருமானிடம் அளித்தனர். பார்வதிதேவி இந்த ஆயுதங்களுடன் மிகச் சக்தி வாய்ந்த "வேல்" என்னும் ஆயுதத்தையும் முருகனை ஆசி செய்து வழங்கினார். அம்மையப்பர் தந்த ஆயுதங்களால் முருகப்பெருமான் அந்த இரண்டு அரக்கர்களையும் அழித்து இந்த உலகத்துக்கே நாதனான சிவபெருமானை வணங்கிய முனிவர்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகள் தொடர வழி செய்தார். இந்த வேலின் பெருமைகள் சொல்லில் அளவிட முடியாதவை. முருகனின் வேல் ஞானம், சக்தி, தைரியம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தர வல்லது. இவை அனைத்தும் இருந்தால் நம்மிடம் செல்வம் தானே தேடி வரும். வேலை வணங்குவது முருகப்பெருமானை வணங்குவதற்குச் சமம். தைப்பூச நன்னாளில் முருகனையும் வேலையும் வணங்குவது, கந்த ஷஷ்டி கவசம் படிப்பது அல்லது கேட்பது, கோயிலில் முருகனுக்கு அர்ச்சனை செய்வது மற்றும் "ஓம் சரவண பவ" என்று 108 முறை ஜபிப்பது ஆகியவற்றால் எதிர்ப்புக்களை முறியடித்து எதிரிகளை வெல்லலாம், வாழ்வில் தன்னம்பிக்கை பெறலாம், மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம். தீயினால் ஏற்படும் ஆபத்துக்களும் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துக்களும் விலகும். சகோதர சகோதரிகளிடம் இருக்கும் கருத்து வேற்றுமைகள் விலகும். உங்கள் திறமைகள் அதிகரிக்கும். வாழ்வில் எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
முருகனையும் வேலாயுதத்தையும் தினமும் வணங்குவோம். வாழ்வில் நன்மைகள் பல பெறுவோம். |
||||||||
by Swathi on 26 Jan 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|