|
||||||||
இரண்டாம் திருமுறை-67 |
||||||||
2.067.திருப்பெரும்புலியூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர்.
தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
2189 மண்ணுமோர் பாக முடையார்
மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார்
வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார்
கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067. 1
திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர். உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும் ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர்.
2190 துன்னு கடற்பவ ளஞ்சேர்
தூயன நீண்டதிண் டோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும்
மேனியி னாளொரு கங்கைக்
கன்னி களின்புனை யோடு
கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.2
கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.
2191 கள்ள மதித்த கபாலங்
கைதனி லேமிக வேந்தித்
துள்ள மிதித்துநின் றாடுந்
தொழில ரெழின்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை
விரிசடை மேன்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.3
கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித் துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும், கங்கை சிரிக்கும் தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல் பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.
2192 ஆடலிலைய முடையார்
அருமறை தாங்கியா றங்கம்
பாடலிலைய முடையார்
பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊடலிலைய முடையார்
யோகெனும் பேரொளி தாங்கிப்
பீடலிலைய முடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067. 4
நடனலயம் உடையவர். அரிய நான்கு மறைகளைத் தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப் பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம் இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை மேற்கொண்டு பெருமை பொருந்திய நள் இரவில் நடனம் புரிபவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.
2193 தோடுடை யார்குழைக் காதிற்
சுடுபொடி யாரன லாடக்
காடுடை யாரெரி வீசுங்
கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப
நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.5
பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர். ஒரு காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப் பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர். எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும் விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகிறார்.
2194 கற்ற துறப்பணி செய்து
காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கண்
முதலியர் வேதபு ராணர்
மற்றி தறிதுமென் பார்கண்
மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிது முகப்பார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.6
கல்வி கற்றதன் பயனை அறிந்த பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார் மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.
2195 மறையுடை யாரொலி பாடன்
மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார்
குழக ரழகர்நஞ் செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங்
கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற்
பெரும்புலியூர்பிரி யாரே.
2.067.7
வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர். மனக்குறை உடையவர் ஆகியோர் குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர், அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர். கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர்.
2196 உறவியு மின்புறு சீரு
மோங்குதல் வீடௌ தாகித்
துறவியுங் கூட்டமுங் காட்டித்
துன்பமு மின்பமுந் தோற்றி
மறவியஞ் சிந்தனை மாற்றி
வாழவல் லார்தமக் கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067. 8
உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை எளிதாகத் தந்து துறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித் துன்ப இன்பங்களைத் தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்; பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார்.
2197 சீருடை யாரடி யார்கள்
சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு
நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார்
தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.9
புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப் போல்வர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர். விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர். தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர். பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலி யூரைப் பிரியாது உறைகின்றார்.
2198 உரிமை யுடையடி யார்கள்
உள்ளுற வுள்கவல் லார்கட்
கருமை யுடையன காட்டி
யருள்செயு மாதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங்
கடிமல ரண்ணலுங் காணாப்
பெருமை யுடைப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2.067.10
உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும், ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரிய திருமாலும் மணமுடைய தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமை யுடைய பெருமான். அவ்விறைவர் பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார்.
2199 பிறைவள ரும்முடிச் சென்னிப்
பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை
வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி
நீடுல கத்திருப் பாரே.
2.067. 11
பிறைவளரும் முடியினை உடைய சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப் பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர் நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப உலகில் வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.067.திருப்பெரும்புலியூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|