|
||||||||
இரண்டாம் திருமுறை-69 |
||||||||
2.069.திருப்பாண்டிக்கொடுமுடி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர்.
தேவியார் - பண்மொழியம்மை.
2211 பெண்ணமர் மேனியி னாரும்
பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங்
காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரு
மிமையவ ரேத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.1
பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொரு கூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர்.
2212 தனைக்கணி மாமலர் கொண்டு
தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும்
விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்
நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 2
பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த்துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர்.
2213 சடையமர் கொன்றையி னாருஞ்
சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 3
பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர்.
2214 நறைவளர் கொன்றையி னாரு
ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங்
காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு
மணமுழ வங்குழன் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 4
பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர்.
2215 போகமு மின்பமு மாகிப்
போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக
வமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி
நன்னுதன் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.5
பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியன வற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர்.
2216 கடிபடு கூவிள மத்தங்
கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற
பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு
மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.6
பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர்.
2217 ஊனமர் வெண்டலை யேந்தி
யுண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது
சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங்
காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.7
பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப் பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில் வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர்.
2218 புரந்தரன் றன்னொடு வானோர்
போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்
பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங்
காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.8
பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர்.
2219 திருமகள் காதலி னானுந்
திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப்
பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து
வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069.9
திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார்.
2220 புத்தரும் புந்தியி லாத
சமணரும் பொய்ம்மொழி யல்லான்
மெய்த்தவம் பேசிட மாட்டார்
வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச்
செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2.069. 10
புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர்.
2221 கலமல்கு தண்கடல் சூழ்ந்த
காழியுண் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்தி
பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ்
சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி
நன்னெறி யெய்துவர் தாமே.
2.069. 11
மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
2.069.திருப்பாண்டிக்கொடுமுடி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|