|
||||||||
இரண்டாம் திருமுறை-70 |
||||||||
2.070.திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென் றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
2222 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப்
பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம்
புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங்
காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம்
பரவு மூரே.
2.070. 1
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.
2223 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு
வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம்
புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை
கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங்
கருது மூரே.
2.070. 2
நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பை உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.
2224 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை
புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல்
நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர்
பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது
பாடு மூரே.
2.070. 3
நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.
2225 வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை
வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம
புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண்
டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங்
கருது மூரே.
2.070. 4
நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடைமுடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.
2226 தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத்
துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர்
எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன்
நகரா நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம்
புகழு மூரே.
2.070. 5
நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும்.
2227 தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை
தலைமு னாண்ட
வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர்
அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர
மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது
கருது மூரே.
2.070. 6
நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப் பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும்.
2228 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு
புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ
டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர
மென்றென் றுள்கிப்
பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய
பெருமா னூரே.
2.070. 7
சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண் பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.
2229 புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு
புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய்
நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன்
மேலம் பெய்து
திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ்
சேரு மூரே.
2.070. 8
நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும்.
2230 சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற்
காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய்
புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர
நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த
விமல னூரே.
2.070. 9
நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக்
2231 செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப்
புகலி செய்ய
கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ்
சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர
மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் கண்ணுதலான்
கருது மூரே.
2.070. 10
செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.
2232 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப்
புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள்
சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர
மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம்
அமரு மூரே.
2.070. 11
நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.
2233 காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின்
பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற்
பனுவன் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம்
பந்தன் சொன்ன
மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை
விருப்பு ளாரே.
2.070. 12
குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.070.திருப்பிரமபுரம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|