|
||||||||
இரண்டாம் திருமுறை-71 |
||||||||
2.071.திருக்குறும்பலா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே திருக்குற்றாலம்.
சுவாமிபெயர் - குறும்பலாநாதர்.
தேவியார் - குழன்மொழியம்மை.
2234 திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து
தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல்
புரிந்தசெல்வர்
இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின
வண்டியாழ்செய்
குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற்
குறும்பலாவே.
2.071. 1
பிறைமதியை அழகுறப் புனைந்து, கங்கையைச் சடையில் கரந்து உமாதேவியை இடப்பாகமாக கொண்டு, பொருந்தாத வேடத்தோடு இடுகாட்டில் உறைதலை விரும்பிய செல்வர் எழுந்தருளியுள்ள இடம் யாதென வினவில், ஏல மணம் கமழ்வதும், சோலைகளில் வண்டுகள் யாழிசை போல ஒலிக்கக் குருந்தமரம் மணம் வீசும், குன்றுகள் அருகே சூழ்ந்துள்ளதுமான குளிர்ந்த சாரலை உடைய குறும்பலாவாகும்.
2235 நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த
நம்பானம்மை
ஆட்பலவுந் தானுடைய வம்மா னிடம்போலும்
அந்தண்சாரல்
கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந்
துண்டுவிண்ட
கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங்
குறும்பலாவே.
2.071.2
பதினாறுகலைகளும் வளர்தற்குரிய பிறைமதியை முடியில் சூடித் திருநீற்றுப் பொடியணிந்த நம்மேல் விருப்புடைய இறைவன், நம்பால் வந்து நம்மை அடிமையாகக் கொண்டருளும் அம்மான். அவனது இடம், அழகிய குளிர்ந்த மலைச் சாரலில் கீளத்தக்க பலவின் கனிகளை மந்திகள் கீறித்தம் கிளைகள் பலவற்றோடு உண்டு வீழ்த்திய சுவையான பலவின் இனிய சுளைகளை ஆண்குரங்குகள் உண்டு மகிழும் குறும்பலாவாகும்.
2236 வாடற் றலைமாலை சூடிப் புலித்தோல்
வலித்துவீக்கி
ஆடலரவசைத்த வம்மா னிடம்போலும்
அந்தண்சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து
பசும்பொனுந்திக்
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற்
குறும்பலாவே.
2.071. 3
ஊன் வாடிய தலைமாலையைச் சூடிப் புலித்தோலை உடுத்து ஆடும் பாம்பை அறையில் கட்டிய அம்மானது இடம், அழகிய குளிர்ந்த சாரலில் பாடும் பெண்வண்டுகள் அரும்புகளைப் போதாக அலர்த்த மகரந்தப் பொடிகள் பசும்பொன் போல உதிரக் காந்தள் மலர்ந்து மணம் பரப்பும் குன்றுகள் சூழ்ந்த குறும்பலாவாகும்.
2237 பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து
பாடியாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங்
கல்சூழ்வெற்பில்
நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டரற்றும்
நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்ஞை பேடையொ டாட்டயருங்
குறும்பலாவே.
2.071. 4
பால் போன்ற வெண்மையான மதியை முடியிற் சூடி, ஒருபாகத்தே உமையம்மையைக் கூடிநின்று ஆடிப்பாடி, மார்க்கண்டேயர் பொருட்டுக்காலனின் உடல் கிழியும் படி அவனைச் சினந்த பெருமானது இடம், கற்கள் சூழ்ந்த வெற்பிலுள்ள சுனைகளில் கருங்குவளைகள் கண் போல மலரவும், வண்டுகள் இசைபாடவும் நெடிய குளிர்ந்த சாரலில் அழகிய மயில்கள் பெண் மயில்களோடு ஆடி மகிழும் குறும்பலாவாகும்.
2238 தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத்
தாங்கித்தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும்
முதுவேய்சூழ்ந்த
மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியும்
மல்குசாரல்
குலைவாழைத் தீங்கனியு மாங்கனியுந் தேன்பிலிற்றுங்
குறும்பலாவே.
2.071.5
தலையில் ஒளிவிரியும் வெண்மையான பிறையையும் கங்கையையும் தாங்கி, உமாதேவியைக் காதலித்து ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவமூர்த்தியின் இடம், முதிய மூங்கில் சூழ்ந்துள்ள மலையிடத்து நீர்க் கசிவுகள் பேரருவியாகப் பொன் கொழித்து ஒழுகுவதும் பொருந்திய சாரலகத்தே வாழைக்குலையும் மாங்கனிகளும் தேன் பிலிற்றுவதுமான குறும்பலா என்னும் கோயிலாகும்.
2239 நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர்
நெற்றிக்கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங்
குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேன மேன மிவையோ டவைவிரவி
யிழிபூஞ்சாரற்
கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங்
குறும்பலாவே.
2.071. 6
திருநீற்றைப் பொருந்தி விளங்கும் முப்புரிநூலை அணிந்தவரும் தண்மதியரும் நெற்றிக்கண்ணரும் காலனைக் கடிந்த வரும் ஆகிய சிவபிரானது இடம், குளிர்ந்த மலையின்கண் ஆண்பன்றி, பெண்பன்றியோடு கலந்து கீழிறங்கும் சாரலின்கண் கொம்புத் தேன் சேகரிக்கும் வண்டுகள் இசைபாட அதனைக் கேட்டுக் குயில் கூவும் குறும்பலாவாகும்.
2240 பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும்
புனலுஞ்சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும்
பிலயந்தாங்கி
மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து
வயிரமுந்திக்
குன்றத் தருவி யயலே புனறதும்புங்
குறும்பலாவே.
2.071. 7
பொன் போன்ற கொன்றை மலர்க் கொத்துக்களையும் இளமதியையும் கங்கையையும் சூடி, பின்னே கொத்தாக அமைந்த நீண்ட சடையை உடைய எம்பெருமானது இடம், பிரளய வெள்ளம் போலப் பெருகி மன்றத்தே அடிக்கப்படும் முழவம் போல ஒலித்து, மணி, வயிரம் முதலியவற்றுடன் சொரியும் அருவியின் புனல்ததும்பும் குறும்பலாவாகும்.
2241 ஏந்து திணிதிண்டோ ளிராவணனை மால்வரைக்கீழ்
அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவ ரிடம்போலுஞ்
சாரற்சாரல்
பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற்
பொலியவேந்திக்
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங்
குறும்பலாவே.
2.071. 8
உயர்ந்த திண்ணிய தோள்களை உடைய இராவணனைக் கயிலைமலையின் கீழ் அடர்த்தவரும், சாந்த மெனத் திருநீற்றை விரவப்பூசியவருமாகிய சைவரது இடம், மழைச் சாரலை உடைய மலைச்சாரலில் வேங்கைப்பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தே அழகுற ஏந்திப் பெண் யானையோடு ஆண் யானைகள் சேர்ந்து வணங்கும் குறும்பலாவாகும்.
2242 அரவி னணையானு நான்முகனுங் காண்பரிய
அண்ணல்சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும்
விரிபூஞ்சாரல்
மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு
மலர்ந்துமாந்தக்
குரவ முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற்
குறும்பலாவே.
2.071. 9
பாம்பணையானாகிய திருமாலும், நான்முகனும் காணுதற்கு அரியவராக விளங்கிய தலைவரும், முடியில் பொருந்த இளம் பிறையைச் சூடியவரும் ஆகிய விகிர்தருக்கு உரிய இடம். விரிந்த பூக்களை உடைய மலைச்சாரலில் மரவம், மல்லிகை, சண்பகம் ஆகியன மலர்ந்து நிற்க அவற்றின் தேனை உண்ணக் குரவமலர்ப் பாவை முறுவல் செய்வது போல மலரும் குன்றினை அடுத்துள்ள குறும்பலாவாகும்.
2243 மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும்
பின்கூறுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங்
கல்சூழ்வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல்
நிருத்தஞ்செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங்
குறும்பலாவே.
2.071. 10
உடலைமூடிய சீவரம் என்னும் ஆடையை அணிந்தவர்களும் முன்னால் அறுசுவை உணவுண்டு பின்னால் காடியைக் கூறாக்கி உண்போரும் ஆகிய சமணர்களை வெறுத்த சைவராகிய சிவபிரானது இடம் கற்கள் நிறைந்த மலையகத்தே நீண்ட மூங்கில்கள் வளைந்து நிற்க, அவற்றில் குரங்குகள் நின்றுஆட, வேடர்கள் குய் என்று ஒலிக்குறிப்போடு கூவிக் கை குவிக்கும் குறும்பலாவாகும்.
2244 கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய
கொல்லேற்றண்ணல்
நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம்
பந்தன்சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார்
விரும்பிக்கேட்பார்
தம்பால தீவினைகள் போயகல நல்வினைகள்
தளராவன்றே.
2.071. 11
பூங்கொம்புகளைக் கொண்ட மலர்ச் சோலைகளைக் கொண்ட குறும்பலாவில் மேவிய கொல்லேற்றுத் தலைவனும், நம்மால் விரும்பப்படுபவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளைப் பரவும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இன்பம் தரும் இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவரும் விரும்பிக்கேட்பவரும் தம்பால் உள்ள தீவினைகள் நீங்கப் பெற்று நல்வினைப் பயன்களைத் தளராது பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
2.071.திருக்குறும்பலா |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|