|
||||||||
இரண்டாம் திருமுறை-72 |
||||||||
2.072.திருநணா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப் பெயர் வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்.
தேவியார் - வேதமங்கையம்மை.
2245 பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண்
டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும்
அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில்
வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந்
திருநணாவே.
2.072. 1
பந்தாடும் விரலைஉடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, பாம்பை அணிகலனாகப் பூண்டு, எருதேறி, அழகிய மாலையாக அரவத்தைப் பூண்டுள்ள சிவபிரானது இடம், அழகிய குளிர்ந்த மலைச்சாரலின் அருகே மந்திகள் நடனமாடவும் பூம்பொழிலில் வண்டுகள் பாடவும் செந்தேனின் தௌவில் தோய்ந்த மாங்கனிகள் உதிரும் வளமுடைய திருநணாவாகும்.
2246 நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை
வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும்
இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட
முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந்
திருநணாவே.
2.072.2
அழகியதொரு கண் பொலிந்து விளங்கும் நெற்றியினரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், பழவினைத் தொகுப்பினைத் தீர்த்தருள்பவரும் ஆகிய எம் இறைவனது இடம், இலைகள் அடர்ந்த காட்டில் மலை அருவி இசைகாட்ட, மூங்கில்கள் உராய்ந்து ஓசை எடுப்ப உயர்ந்த மணிகளைவாரி அலைகள் கரைகளில் சேர்க்கும் திருநணாவாகும்.
2247 நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய்
ஞாலமேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க் கிடம்போலும்
விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகண் மோத மயிலாலுஞ்
சாரற்செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந்
திருநணாவே.
2.072. 3
திருத்தமான இசையுடன் வேதங்களை அருளி, உமையொரு பாகராய் மின்னல் போன்ற செஞ்சடையினராய் விளங்கும் சிவபிரான் உலகம் ஏத்த விளங்கும் இடம், மணம் கமழும் மலை யகத்தே குன்றுகள் போல அருவியின் திரைகள் எழுந்து மோத மயில்கள் ஆட வானவர்கள் சாரலை அடைந்து ஏத்தி வணங்கும் சிறப்பினதாகிய திருநணாவாகும்.
2248 கையின் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து
கரித்தோல்கொண்டு
மெய்யின் முழுதணிந்த விகிர்தர்க்கிடம்போலு
மிடைந்துவானோர்
ஐய வரனே பெருமா னருளென்றென்
றாதரிக்கச்
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந்
திருநணாவே.
2.072.4
கையின் மழுவை ஏந்தி, காலில் சிலம்பை அணிந்து, யானையின் தோலைப் போர்த்து விளங்கும் விகிர்தனுக்குரிய இடம், தேவர்கள் கூடிநின்று ‘ஐயனே! அரனே! பெருமானே! அருள்புரிக, என்று விரும்பிப் போற்றுவதும், செந்தாமரை மலர்கள் தேனைத் தருவதுமாகிய திருநணாவாகும்.
2249 முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில்
வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தா ரிடம்போலுஞ்
சோலைசூழ்ந்த
அத்தே னளியுண் களியா லிசைமுரல
ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந்
திருநணாவே.
2.072.5
முத்துப் போன்ற பற்களை உடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கத் தம் மார்பில் வெண்ணூல் பூண்டு பூங்கொத்துக்களைச் சடைமிசைச்சூடியுள்ள சிவபிரானது இடம், சோலைகளில் சூழ்ந்த வண்டுகள் தேனுண்ணும் விருப்பினால் இசைபாடி ஆட, தும்பிகள் ‘தெத்தே’ என்ற ஒலிக்குறிப்போடு முரலல் விளங்கும் அழகுடையதும் பெயர் சொல்லக் கேட்டார் வினைகளைக் கெடுப்பதும் ஆகிய திருநணாவாகும்.
2250 வில்லார் வரையாக மாநாக நாணாக
வேடங்கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும்
புலியுமானும்
அல்லாத சாதிகளு மங்கழன்மேற் கைகூப்ப
அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல வருள்புரியுந்
திருநணாவே.
2.072. 6
மேருமலை வில்லாகப் பொருந்த, வாசுகி என்னும் பெரிய பாம்பு நாணாக அமைய, தான் பெருவீரனாக வேடம்புனைந்து அவுணர்தம் முப்புரங்களையும் எரித்தவனது இடம், புலி மான் இவையும் அல்லாத பிறவிலங்கினங்கள் யாவும் திருவடிகளைக் கைகூப்பி வணங்க, அடியவர்கூடி வழிபடுவதும், யாரும் செல்ல இயலாத வீட்டு நெறிக்குச் செல்ல இறைவன் அருள் புரிவதும் ஆகிய திருநணாவாகும்.
2251 கானார் களிற்றுரிவை மேன்மூடி யாடரவொன்
றரைமேற்சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த
கோயிலெங்கும்
நானா விதத்தால் விரதிகணன் னாமமே
யேத்திவாழ்த்தத்
தேனார் மலர்கொண்டடியா ரடிவணங்குந்
திருநணாவே.
2.072. 7
காட்டில் வாழும் யானையின் தோலால் உடலை மூடி, ஆடும்பாம்பினை அரைமேல் கட்டி, ஊன் பொருந்திய தலையோட்டில் பலி ஏற்று உகப்பவராகிய சிவபிரான் உவப்புடன் மேவும் கோயில் தவவிரதிகள் எங்கும் பல்வேறு வகைகளில் திருப்பெயர் களைச் சொல்லி வாழ்த்த அடியவர் தேன்சிறந்த மலர்களைக் கொண்டு மகிழ்ந்து அடி வணங்குவதாகிய திருநணாவாகும்.
2252 மன்னீரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய
விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு
முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய
வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந்
திருநணாவே.
2.072. 8
பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், மலைக் குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைக்குன்றி அழல் பொழியும் தன் விழி குறைய அதனோடு போரிட்டு முன்றிலில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.
2253 மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான்
மனைகடோறும்
கையார் பலியேற்ற கள்வ னிடம்போலுங்
கழல்கணேடிப்
பொய்யா மறையானும் பூமிய ளந்தானும்
போற்றமன்னிச்
செய்யா ரெரியா முருவ முறவணங்குந்
திருநணாவே.
2.072. 9
கரிய நீலமணிபோன்ற மிடற்றினனும், உமைபாகனும் வீடுகள் தோறும் பலியேற்றுப் பலியிடுவார் உள்ளங்களைக் கவரும் கள்வனும் ஆகிய சிவபெருமானது இடம் திருமுடி திருவடிகளைத் தேடி வேதங்களை ஓதும் நான்முகனும் நிலம் அளந்த திருமாலும் போற்ற நிலைபேறுடைய செந்தீயுருவாய் உருவம் பெற அவர்கள் இருவரும் அப்பெருமானது அடிமுடி காணல் ஆற்றாது வந்து வழிபடும் திருநணாவாகும்.
2254 ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார்
அல்லல்பேசி
மூடுருவ முகந்தா ருரை யகற்று
மூர்த்திகோயில்
ஓடு நதிசேரு நித்திலமு மொய்த்தகிலுங்
கரையிற்சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந்
திருநணாவே.
2.072. 10
ஆடையின்றி அம்மணமாகத் திரிந்து இரந்து உண்பவரும் துன்பமான செய்திகளைப் பேசி உடலைப் போர்த்தித் திரிபவரும் ஆகிய அமணர், பத்தர்களின் உரைகளைச் செவி மடுக்காத சிவமூர்த்தியின் கோயில், பெருகி ஓடும் நதி, முத்து, அகில் முதலியவற்றைக் கரையில் சேர்ப்பதும், பெரியோர் சிறப்புடன் வந்து வழிபடுவதும், கட்புலனாய் ஒளிபெருகி விளங்குவதுமாகிய திருநணாவாகும்.
2255 கல்வித் தகத்தாற் றிரைசூழ் கடற்காழிக்
கவுணிசீரார்
நல்வித் தகத்தா லினிதுணரு ஞானசம்
பந்தனெண்ணும்
சொல்வித் தகத்தா லிறைவன் றிருநணா
வேத்துபாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம்
மண்ணின்மேலே.
2.072. 11
கரையை அகழும் வித்தகத்தோடு அலைகள் சூழும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றி நல்ல ஞானத்தால் எல்லாவற்றையும் இனிதுணரும் ஞானசம்பந்தன் கருதிச் சொல் வித்தகத்துடன் இறைவனது திருநணாவை ஏத்திய இப்பதிகப்பாடல்களை மேம்பட்ட இசைத் திறமையால் பாடிப் போற்றுவார் இவ்வுலகில் பழியிலராவர்.
திருச்சிற்றம்பலம்
2.072.திருநணா |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|